மாரிதாஸ் மீதான "வீடியோ" வழக்கை ரத்து செய்த நீதிபதி சுவாமிநாதன்.. இன்னொன்னும் இருக்காமே..!
மாரிதாஸ் மீதான மேலும் ஒரு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது
சென்னை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது... நீதிபதி சுவாமிநாதன் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் பாஜக ஆதரவாளராக கருதப்படுபவர். இவர் வலதுசாரி கொள்கை கொண்ட வீடியோக்களையும், திமுக எதிர்ப்பு வீடியோக்களையும் Maridhas Answers என்ற பெயரில் இயங்கும் யூடியூப் சேனலில் வெளியிடுவது வழக்கம்.
இப்படி வெளியிடும் வீடியோக்கள் பல சமயங்களில் சர்ச்சைகளில் கொண்டு போய் விட்டுவிடும்.. இதற்காக இவர் கைதாவார்.. மறுபடியும் வெளியே வந்துவிடுவார்.. மீண்டும் கைதாவார், ஜாமீனில் வெளியே வருவார்.

பரபரப்பு ட்வீட்
அந்த வகையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தையொட்டி ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையானது... அதில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கிறது. ஆகவே இங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

மாரிதாஸ்
இந்த ட்வீட் தமிழக அரசியலில் பற்றிக் கொண்டு எரிய தொடங்கியது.. ஆனால், உடனடியாக அப்பதிவை நீக்கிவிட்டார் மாரிதாஸ்.. இதையடுத்து அவரை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்... சிறையில் இருந்தும் சும்மா இல்லாமல், கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தினர் தான் காரணம் என்று வீடியோவை போட்டார் மாரிதாஸ்.. இதுதொடர்பாக நெல்லை மேலப்பாளையம் போலீஸார் மாரிதாஸை கைது செய்தனர்.

அடுத்த சிக்கல்
இப்படி அடுத்தடுத்த வழக்குகளில் மாரிதாஸ் சிக்கி கொண்டார்.. ஆனால், இரு வழக்குகளையும் மதுரை ஹைகோர்ட் ரத்து செய்துவிட்டது. எனினும் தூத்துக்குடி கோர்ட்டில் மாரிதாஸ் மீது இன்னொரு கேஸ் உள்ளது.. அதாவது, தூத்துக்குடியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காயத்ரி என்பவர் கோலம் ஒன்றை போட்டிருந்தார்.. இந்த கோலத்தை விமர்சித்து வீடியோ போட்டிருந்தார் மாரிதாஸ்.. அதில், காயத்ரி திமுக - பாகிஸ்தான் சேர்ந்து போட்ட கோலம் என்று தலைப்பை போட்டிருந்தார்.. இதனால், திமுகவை களங்கப்படுத்தியதாக சொல்லி, திமுக மாணவரணியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர் மாரிதாஸுக்கு எதிராக தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்..

அதிரடி ரத்து
அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கேட்டுக் கொண்டிருந்தார்... இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்திருந்தது.. வழக்கை விசாரித்த சுவாமிநாதன் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் மாரிதாஸுக்கு எதிரான தூத்துக்குடி கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்துசெய்து நீதிபதி சுவாமிநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். எனினும், நியூஸ் 18 சானல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications