வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் வர அனுமதிச் சீட்டு முறை வேண்டும்! வேல்முருகன் வலியுறுத்தல்!
சென்னை: வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் வர அனுமதிச் சீட்டு முறை வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கூறும் அவர் இங்கு குற்றச் செயல்களை செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று பதுங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதவது;

வட மாநிலத்தவர்கள்
திருப்பூர், அவிநாசி, கோவை, அம்பத்தூர், கிண்டி, திருப்பெரும்புதூர் போன்ற பல இடங்களில் தமிழ்த் தொழிலாளிகளை வடமாநிலத் தொழிலாளிகள் தாக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தற்போது, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சின்னமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜாயின்ஷா. இவரை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாகவும், அதில் ஜாயின்ஷா உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மார்வாடிகள்
தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத்தவர்கள் இங்கு கொள்ளை - கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு, எளிதாகத் தப்பிச் சென்று தங்கள் சொந்த மாநிலத்தில் பதுங்கிக் கொள்வதும் அவ்வப்போது நடக்கிறது.தமிழ்நாட்டின் தொழில் வணிகத்தை மார்வாடி - குசராத்தி - தெலுங்கர் - மலையாளிகள் எனப் பல தரப்பினரும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

எங்கு பார்த்தாலும் வடக்கர்கள்
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் - தொழிலகங்கள் - தொடர்வண்டி நிலையங்கள் - வங்கிகள் என அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரே நிறைந்துள்ளனர். விவசாயம், சித்தாள் போன்ற அடிமட்ட பணிகளிலும் வடமாநிலத்தவரே நிறைந்துள்ளனர். இன்னொரு புறத்தில், பா.ச.க. போன்ற கட்சிகள் வடமாநிலத்தவர் அதிகமுள்ள பகுதிகளிலேயே மார்வாடிகளின் துணையோடு காலூன்றி நிற்பது கண்கூடாகத் தெரிகிறது.

அனுமதிச் சீட்டு தேவை
எனவே, தமிழ்நாட்டில் குடியேறி வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவருக்கு இனியாவது வரம்புகட்டித் தடுப்பதே இன்றைய தேவையாகும். இதற்காக, தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு, வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டை வழங்க கூடாது. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில், உள் அனுமதிச் சீட்டு முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications