சளி இருந்தாலே கொரோனா வந்ததாக பயப்படாதீங்க.. சென்னையில் 26,000 மாஸ்க் ரெடி.. 'டீன்' ஜெயந்தி பேட்டி
Recommended Video
சென்னை: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 6 வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பற்றி, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தமிழகத்தை பொறுத்த அளவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் கிடையாது. இப்போதுவரை சந்தேகத்தின்பேரில் தான் பலரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சளி மாதிரிகள் புனே நகரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிதான் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சென்னையிலோ, தமிழகத்தின் பிற பகுதிகளிலோ, கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை.
சளி மற்றும் காய்ச்சல் இருந்தாலே, கொரோனா வைரஸ் பாதிப்பு என்று யாரும் பயப்பட வேண்டாம். இது குளிர்காலம் என்பதால் சளி மற்றும் காய்ச்சல் என்பது பரவலாக இருக்கக்கூடிய ஒன்றுதான்.
சீனாவில் இருந்து வருவோரிடம் இருந்துதான் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. விமான நிலையங்களில் தெர்மல் பரிசோதனை மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சீனாவில் இருந்து வந்த ஒரு பெண்மணிக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததால் சோதனைகள் நடத்தினோம். ஆனால் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை தர ஆறு தனிமை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. 26,000 என்ற எண்ணிக்கையில் 3 அடுக்கு முகக் கவசங்கள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications