சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து.. ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்.. ஸ்தம்பித்த செங்கல்பட்டு
சென்னை: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை திடீரென பாதியில் நிறுத்தப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்து ஏறிச்சென்றார்கள். ஒரே நேரத்தில் அதிக மக்கள் குவிந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரயில் வழித்தடம் புறநகர் மக்களின் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. தாம்பரம் தொடங்கி பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்க பெருமாள் கோவில், பரனூர், செங்கல்பட்டு வரை உள்ள புறநகர் பகுதி மக்களுக்கு ரயில் பயணம்தான் முக்கியமான வாழ்வாதாரம். சென்னையில் படிக்க, வேலை செய்ய பலரும் தினமும் வந்து செல்கிறார்கள்.

காலை நேரங்களில் அதிக அளவிலும், மற்ற நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும், சில நேரங்களில் மட்டும் ஒரு மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில்கள் செங்கல்பட்டு சென்னை கடற்கரை இடையே சென்று வருகின்றன. செங்கல்பட்டு சென்னை கடற்ரை ரயில்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருக்கும்.
இந்நிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீண்ட மக்கள், இன்று முதல் வழக்கம் போல் வேலைக்கு செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்தனர். ஆனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்கள் நீண்ட நேரமாக வரவே இல்லை. இதனிடையே சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் தண்டாவளங்கள் சேதம் அடைந்துள்ளதால் புறநகர் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள், அலுவலகம் செல்லவும் கல்லூரி செல்லவும், வேலை நிமித்தமாக சென்னை செல்லவும் முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.ரயில்கள் நிறுத்தப்பட்டதால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். மக்கள் வெள்ளத்தால் செங்கல்பட்டு புதிய பேருந்துநிலையம் நிரம்பி வழிகிறது.
சிங்க பெருமாள் கோயில் வரையாவது பேருந்தில் சென்று அங்கிருந்து ரயிலில் ஏறிவிடலாம் என்று மக்கள் பேருந்துகளில் ஏறி சென்றார்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் குவிந்த காரணத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications