"யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.." நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் 'நறுக்' பதில்!
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த, ஓபிஎஸ், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன்' என்றார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் பரபரப்பு வாதங்கள் முடிந்து கடந்த மாதம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவின் எதிர்கால தலைமையை நிர்ணயிக்கும் முக்கிய வழக்காக அக்கட்சி தொண்டர்கள் இதை பார்த்ததால் தீர்ப்பு வெளியாகும் தேதி அக்கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது
இந்த நிலையில், பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி அணியினர் கொண்டாடினர்.

முழுமையான வெற்றி இல்லை
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் அடியாக பார்க்கப்பட்டது. சிவில் வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும் சிவில் வழக்குகளை பொருத்தவரை பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது. இதனால், அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் முழுமையாக சென்றுவிட்டதாகவே மூத்த பத்திரிக்கையாளர்களின் கருத்தாகவும் உள்ளது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த முழுமையான வெற்றி இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

தீர்மானங்கள் செல்லும் என்று கூறவில்லை
இது தொடர்பாக வைத்திலிங்கம் கூறுகையில், "பொதுக் குழு செல்லும் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்மானங்கள் செல்லும் என்று கூறவில்லை. தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்" என்றார். அதேவேளையில், அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூன்று பேருக்கும் இடம் இல்லை என்பதை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அழுத்திச் சொன்னது. பாஜகவை, டெல்லி மேலிடத்தை மலைபோல நம்பி நின்று தற்போது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி.. அரசியல் வாழ்க்கையே சூனியம் என்ற நிலைக்கு ஓபிஎஸ் தள்ளிவிட்டப்பட்டிருக்கிறார் என்பது மூத்த பத்திரிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது. பலரும் இதுபற்றி ட்விட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

ஆதரவாளர்கள் ஆலோசனை
இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில், இன்று பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வழங்கிய பிறகு வரத் தொடங்கினர். முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் துதி திருநாவுக்கரசு மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வம் தரப்பு நிர்வாகிகள் வந்திருந்தனர்.

மக்கள் தான் தீர்மானிப்பார்கள்
இந்த ஆலோசனைக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் சென்னை புறப்பட்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "நல்ல ஒரு அறிக்கை வெளிவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிலளித்தார். தொடர்ந்து இபிஎஸ் தரப்பு ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ஒபிஎஸ், "தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications