காணாமல் போன சிறுமியை தேடியபோது வெளிவந்த அதிர்ச்சி தகவல்! சென்னை லைப்ரரி மாடியில் கொடுமை! 3 பேர் கைது
சென்னை: சென்னை பெரம்பூரில் 3 பள்ளி மாணவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி மாயமான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்தியபோது வீனஸ் நகர் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு, சென்னை திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது 12 வயது மகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்றும், பள்ளிக்கு சென்று விட்டு தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற தனது மகள் இதுவரை வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறி இருந்தார்.

இந்த புகார் குறித்து, திருவிக நகர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடினர். செல்போன் டவர் சிக்னல்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், அப்போது பெரம்பூர் வீனஸ் நகர் பகுதியில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள அரசு நூலகத்துக்கு மேலே அந்தச் சிறுமி மற்றும் அவரது 2 தோழிகள், 3 ஆண் நண்பர்களுடன் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று சிறுமிகள் மற்றும் அவரது ஆண் நண்பர்களை மீட்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், 12 வயது சிறுமியின் நண்பர்களான 14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுமி ஆகியோருடன் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர், அகரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர், மற்றும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என மூன்று பேரும், சிறுமிகளுடன், இரவு நூலகத்தின் மொட்டை மாடியில் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, மூன்று சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவிக நகர் போலீசார் இந்த வழக்கை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இன்ஸ்பெக்டர் செண்பக தேவி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிகளை மருத்துவ பரிசோதனை முடித்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக கூறி பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கும், மற்றவர்களை சிறைக்கும் அனுப்பி வைத்தனர்.
பெரம்பூரில் ஒரு சிறுமி மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 3 சிறுமிகள், தங்களது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications