பேரறிவாளன் இன்று விடுதலை? ஆளுநரின் அதிகாரத்தை அசைத்து பார்த்த உச்ச நீதிமன்றம்.. டாப் 10 விமர்சனங்கள்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடுத்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த சில வாரங்களாக வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி விசாரணை முடிந்தது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் வைத்தது. உச்ச நீதிமன்றம் வைத்த விமர்சனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்!
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது. இதை சுட்டிக்காட்டி 2014ல் இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தன்னுடையாக குறைக்கப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை? உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!
விடுதலை வேண்டும்
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். அதோடு வழக்கு விசாரணை நடக்கும் இடைப்பட்ட காலத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இவர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில்தான் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி உள்ளனர்.
நீதிபதிகள்
இந்த நிலையில் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பின்வரும் கேள்விகளை மத்திய அரசை நோக்கியும், தமிழ்நாடு ஆளுநரை நோக்கியும் வைத்தனர்.
1. 32 வருடமாக பேரறிவாளன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்பானது. அதனால் மாநில அரசுக்கே இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல.
விசாரணை நடக்கட்டும்
2. ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு. இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது.
3. பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது . அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம்.
4. இந்த வழக்கு பெரிய விசாரணை, சதி விசாரணை நடக்கும்படி நடக்கட்டும். அதுவரை பேரறிவாளன் ஜாமீனில் வெளியே இருக்கட்டுமே. அவர் மூன்று முறை பரோல் நீட்டிக்கப்பட்டும் எந்த தவறும் செய்யவில்லை. நன்றாக செயல்பட்டு இருக்கிறார். அவர் 30 வருடமாக சிறையில் இருக்கிறார். நீங்கள் விசாரணையை முடியுங்கள், அவர் பெயிலில் இருக்கட்டும். அதனால் அவருக்கு பெயிலுக்கான உரிமை உள்ளது.
ஆளுனர் மீது சீற்றம்
5. குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ யாராக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட கூடாது. மத்திய அரசுக்கு இதில் வாதம் வைக்க எதுவும் இல்லை என்றால், நாங்கள் ஏன் இப்போதே அவரை விடுவிக்க கூடாத. இதில் நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவு எடுப்போம். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.
6. பேரறிவாளன் வழக்கில் 23 ஆண்டுகள் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்பது தெரியுமா? இப்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவிட்டார் என்கிறார்கள். ஆளுநர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இப்படி செய்தார்?
7. அமைச்சரவை முடிவு எடுத்த பின் ஆளுநர் அந்த விவகாரத்தை ஏற்க வேண்டும். ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது தானே. அதை விடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரையை மேற்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா. இதை பற்றி முதலில் மத்திய அரசு தெளிப்படுத்த வேண்டும்.
ஆளுநர் ஏன் செய்யவில்லை?
8. 161 CrPC. சட்ட பிரிவு படி ஆளுநர் இதுவரை பலரை விடுதலை செய்து இருக்கிறாரே. இவரை மட்டும் ஏன் செய்யவில்லை. அப்படி என்றால் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமேதான் இருக்கிறதா? ஆளுநருக்கு இல்லையா? இதுவரை வரலாற்றில் ஆளுநருக்கு இருந்த அதிகாரம் அப்படியே நீக்கப்படுகிறதா? அப்படி என்றால் எல்லா மன்னிப்பு வழக்கும் இனி குடியரசுத் தலைவருக்கு மட்டுமேதான் செல்ல வேண்டுமா?.
9. தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால், இத்தனை நாட்கள் ஆளுநர்கள் வழங்கிய மன்னிப்பு எல்லாம் விதி மீறல் ஆகிவிடும். 70-75 வருடங்களாக ஆளுநர் யாரை எல்லாம் விடுதலை செய்தாரோ அது எல்லாம் விதிமீறல் ஆகிவிடுமா? அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மாறிவிடுமா?.
10. பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் 30 வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். அவரின் நடத்தையில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் விடுதலை செய்யும் வரை காத்திருக்காமல் நாங்களே ஏன் விடுதலை செய்ய கூடாது? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில்தான் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.