ஒரு நாளைக்கு 10 ரூபாய் பேட்டா! சிஐடி சகுந்தலாவின் முதல் சம்பளம்..!
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா பற்றிய பசுமையான நினைவுகளை தயாரிப்பாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழில் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா கடந்த 2 நாட்கள் முன்னதாக மறைந்த செய்தி வெளியானது. அவர் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் பெரிய அளவில் இந்தச் செய்தி கவனிக்கப்படவில்லை. அருணாசலம் சகுந்தலா என்ற பெயரை நடிக்க வந்த காலத்தில் ஏ.சகுந்தலா என்று வைத்திருந்தார். பின்னால் அதுவே சிஐடி சகுந்தலா என மாறியது. பல நடிகைகள் பிறமாநிலங்களில் பிறந்து தமிழ்நாட்டில் செட்டில் ஆவார்கள். இவரோ தமிழ்நாட்டில் பிறந்து கர்நாடகாவுக்குப் போய் செட்டில் ஆகிவிட்டார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு எனக் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்தவர். குரூப் டான்ஸ் ஆடும் பெண்ணாக வலம் வந்த இவர் சிஐடி சங்கர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் கொடூர வில்லியாக மாறி சினிமா ரசிகர்களை மிரட்டினார்.
இவரைப் பற்றிய நினைவுகளை தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் ரவி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "இவர் முதலில் முன்வரிசையில் ஆடக்கூடிய குரூப் டான்ஸராகதான் இருந்தார். ஒரு நாளைக்கு அப்போது 10 ரூபாய் பேட்டா கிடைக்கும். அதான் வருமானம். வழக்கமாக டான்ஸ் மாஸ்டர்கள் அழகாக இருக்கக் கூடிய டான்ஸர்களை முன்வரிசையில் ஆட வைப்பார்கள். அப்படித்தான் சினிமாவுக்குள் வந்தார் சிஐடி சகுந்தலா.
நல்ல அறிமுகம் ஆன காலத்தில் நடனத்திற்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பார். எங்கள் முக்தா ஃபிலிம்ஸ் நிறுவன படங்களில் அப்படித்தான் நடிக்கத் தொடங்கினார். ஏவி.எம் தயாரித்த 'அன்பே வா' படத்திலும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் 'சிலை எடுத்தால் ஒரு சின்ன பொண்ணு' பாடலிலும் நடனமாடி இருப்பார். ஹிந்தியில் கூட இவர் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
இப்படி ஒரு டான்ஸராகத்தான் ஆரம்பக் காலத்திலிருந்தார். கூடவே பல படங்களில் நடிகைகளுக்கு டான்ஸ் கற்று தரும் நபராகவும் இருந்தார். நாங்கள் தயாரித்த 'நினைவில் நின்றவள்' படத்திற்கு சகுந்தலாதான் டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். பல ஆண்டுகளாகவே எங்கள் படங்களில் இவர் வேலை பார்த்திருக்கிறார். இவர் பெயர் ஏ.சகுந்தலா. இவருக்கு முன்பு சினிமாவில் ஜொ.சகுந்தலா என்று ஒருவர் இருந்தார். மாடர்ன் தியேட்டர் எடுத்த சிஐடி சங்கர் படத்தில் இவர் ஹீரோயினாக நடித்தார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட். ஆகவே, சிஐடி சகுந்தலா என பெயர் வைத்து ரசிகர்கள் அழைத்தனர். அதுவே அவரது உண்மையானப் பெயராக மாறிவிட்டது.
சகுந்தலாவுக்கு மாடர்ன் தியேட்டர் கம்பெனியை தாண்டி வெளியில் பட வாய்ப்புகள் வரவில்லை. அப்போதுதான் என் அப்பா முக்தா சீனிவாசனைச் சந்தித்து மீண்டும் நடன இயக்குநராக வாய்ப்பு கேட்டார். அந்தக் காலத்தில் ஜோதி லக்ஷ்மி, விஜயலலிதா, ஜெய்குமாரி எனச் சிலர்தான் பெண் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அப்போது அதற்குப் பற்றாக்குறை இருந்தது.
ஆகவே அப்பா தன் படத்தில் வில்லி பாத்திரத்தில் நடிக்க அழைத்தார். சகுந்தலா அதற்குச் சம்மதிக்கவில்லை. அப்பா கட்டாயப்படுத்தி 'தவப் புதல்வனி'ல் வில்லியாக நடிக்க வைத்தார். அதில் நடிக்கும் போது 'வசந்த மாளிகை' வாய்ப்பு வந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாகப் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தன. அதன்பிறகு அப்பா எடுத்த 'சூரியகாந்தி'யில் காமெடி ரோலில் நடித்தார்.
எங்கள் கம்பெனிக்கு அடுத்து ஏபி நாகராஜன் படங்களில் சகுந்தலாவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக 90களுக்கு பிறகு அப்பா டிவி சீரியல்கள் தயாரித்தார். மூன்று சீரியல்களில் சிஐடி சகுந்தலாவை நடிக்கவைத்தார். அன்றக்கு அவரது சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் இருக்கும். அதன்பின்னர் அவர் பெங்களூருக்குக் குடியேறிவிட்டார். குடும்ப ரீதியாக இருந்த தொடர்பு அதனால் குறைந்துவிட்டது.
அவர் நன்றாகத்தான் குடும்பத்துடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். ஒரு குறையும் இல்லை. தமிழ்நாட்டு சினிமா துறையுடன் அவருக்குத் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட 84 வயது அவருக்கு. அதனால் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துள்ளார். சகுந்தலாவின் மகள் செல்வியிடம் நான் பேசினேன். அவர்தான் இந்தத் தகவல்களைச் சொன்னார். புட்டபர்த்தி சாய்பாபா பக்தர் சகுந்தலா. பலமுறை அவரை கோயிலில் சந்தித்து இருக்கிறேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications