உயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க!
மகன் மனோஜ் பாண்டியனுக்காக பிஎச் பாண்டியன் பிரச்சாரம் செய்தார்.
Recommended Video

சென்னை: எல்லாம் ஒரு நாள் போகத்தானே போறோம்.. இப்படி கூட ஓட்டு கேட்பாங்களா?ன்னு நெல்லை தொகுதி மக்கள் பேசி கொள்கிறார்கள்.
இவ்வளவு காலம் கட்சியில் இருந்த செல்வாக்கை வைத்து இந்த முறை பெரிய புள்ளிகள் எல்லாம் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிட்டார்கள். இதனால் இந்த விஷயம் அதிமுக, திமுக கட்சிகளுக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த பெரிய புள்ளிகள் மகன்களை ஜெயிக்க வைக்கும் அடுத்த கட்ட வேலையில் இறங்கிவிட்டனர்.

நிறைவேற்றுவேன்
ஒரு பக்கம் துரைமுருகன், "என் மகன் செய்றானோ இல்லையோ, உயிரை தந்தாவது உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவான் இந்த துரைமுருகன்" என்கிறார். வாக்குறுதியை துரைமுருகன் நிறைவேற்றுவதற்கு மகன் எதற்கு போட்டியிடவேண்டும் என்று புரியவில்லை.

சபாநாயகர்
அதேபோல, திருநெல்வேலி பக்கமும் ஒருவர் இப்படித்தான் பேசி வருகிறார். அவர் வேறு யாருமில்லை.. மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவரும், எம்ஜிஆர் காலத்து சபாநாயகருமான பிஹெச்.பாண்டியன்தான். இவரது மகன் மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.

உடம்பு சரியில்லை
அந்த பகுதியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும் பி.ஹெச்.பாண்டியன், "45 வருஷத்துக்கும் மேலா இந்த தொகுதியில் நான் அறிமுகமானவன். எனக்கு இப்போ உடம்பு சரியில்லை.. இதனால் 2 வருஷமாக வெளியில் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறேன். தேர்தல் முடிவு வரும்வரை நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்கு தெரியாது. அதனால் என்னை மனதில் வைத்தாவது எனது மகன் மனோஜ் பாண்டியனை வெற்றி பெற செய்யுங்கள்" என்றார்.

இப்படியா பேசறது?
ஒரு பக்கம் இவரது பேச்சை கேட்டு தொகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் "எல்லாரும் ஒருநாள் போகத்தானே போறோம்.. இதில் என்ன இருக்கு.. இப்படி பேசியா ஓட்டு கேட்கிறது" என்று சொல்கிறார்களாம்!

அறுவடை
ஆக மொத்தம் அன்று ஓடி ஓடி தங்கள் கட்சிக்காக உழைத்ததை எல்லாம் இன்று தங்கள் மகன்களுக்காக அறுவடை செய்ய துவங்கிவிட்டார்கள் பெரிய தலைகள்!












Click it and Unblock the Notifications