ஈபிஎஸ்க்கு முத்தம் கொடுத்த எம்ஜிஆர்.. பரவும் போட்டோ.. ‛நியாயம் வேண்டாமா’ கேசிபிக்கு வந்ததே கோபம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு , எம்ஜிஆர் முத்தம் கொடுக்கும் எடிட் செய்யப்பட்ட போட்டோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு போட்டியில் இருந்து விலகிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளரான தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இடையேயான போட்டியில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக கூறி அவரது தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் முத்தம் கொடுக்கும் வகையிலான போட்டோக்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. இதனை பார்த்த அதிமுக முன்னாள் எம்பியான கேசி பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக ஒருமையில் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்த நிலையில் பொதுக்குழு மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கு தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கிறது. விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே வேட்பாளர்களை அறிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு களமிறக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இடைக்கால நிவாரணம் கோரியது.

விலகிய ஓ பன்னீர் செல்வம்
இதை ஏற்ற உச்சநீதிமன்றம் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டும். இதில் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என கூறியது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500க்கும் அதிகானவர்களின் ஆதரவு மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்த தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓ பன்னீர் செல்வம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தென்னரசுக்கு இரட்டை இலை
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. கட்சியில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது யார் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே போட்டி நிலவிய நிலையில் அதில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளதாக அவரது அணியினர் கொண்டாடி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்துவார். ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம் என்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் போட்டோக்கள் பரவி வருகின்றன.

ஈபிஎஸ்க்கு எம்ஜிஆர் முத்தம்-கேசிபி விமர்சனம்
இதில் ஒரு போட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர், எடப்பாடி பழனிச்சாமியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் வகையில் அந்த போட்டோ அமைந்திருந்தது. இது எடிட் செய்யப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியினராக பகிரப்பட்டு வருகிறது. இந்த போட்டோவுக்கு அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருமையில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில், எடிட்டிங் என்றிருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா எடப்பாடி போலியாக உங்களை உயர்த்தி கொள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆரை அவமானப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

யார் இந்த கேசி பழனிச்சாமி?
இப்படி கருத்து தெரிவித்துள்ள கேசி பழனிசாமிதான்அதிமுக சார்பில் காங்கேயம் தொகுதி எம்எல்ஏவாகவும், திருச்செங்கோடு எம்பியாகவும் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 வாரத்தில் பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இவர் இதற்கு முன்பும் கூட கமலாலயம் சென்று பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஆதரவு கேட்டதை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications