அட நீங்க வேற.. ரேசன் அரிசியை கொடுப்பதே மத்திய அரசு தான்! பியூஷ் கோயலுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
சென்னை: தமிழகத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசி தரம் குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்து உள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் ராமேஸ்வர் டெலி, நாராயணசாமி ஆகியோர் சமீபத்தில் தான் தமிழ்நாட்டிற்கு வந்து சென்று இருந்தனர்.

பியூஷ் கோயல்
இந்தச் சூழலில் இப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்தியா வளர்ச்சிக்கான சரியான தருணம் இது என்று குறிப்பிட்ட அவர், பாஜக குடும்ப அரசியல் செய்யும் கட்சி இல்லை என்றும் குடும்ப அரசியல் செய்யும் ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்றார்.

அரிசி தரம்
பிரதமர் மோடியைத் தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிப்பதாகத் தெரிவித்த அவர், மத்திய அரசுத் திட்டங்களில் கூட மோடியின் படத்தை வெளியிட அஞ்சுவதாகத் தெரிவித்தார். மேலும், ரேசன் கடைகளுக்கு மத்திய அரசு தரம் வாய்ந்த அரிசியை அனுப்பினாலும் திமுக அரசு மக்களுக்கு ரேசன் கடைகளில் தரமற்ற அரிசியையே வழங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

அவர்கள் தருவது தான்
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்து உள்ளார். அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "இன்று காலை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியைத் தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாகக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.. ரேசன் அரிசி என்பது அவர்கள் கொடுப்பது தான்.. அது எப்படித் தரமில்லாததாகப் போகும்..

ஆய்வு கூட செய்யவில்லை
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தவறான தகவலைக் கூறி உள்ளார்.. குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காக பியூஷ் கோயல் இப்படிப் பேசியுள்ளார்: அது வருத்தமளிக்கிறது.. பல லட்சம் மக்கள் ரேசன் அரிசியைத் தான் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறீர்கள். அமைச்சர் ஒரு ரேசன் கடையில் ஆய்வு செய்துவிட்டுச் சொல்லி இருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்று இருப்போம்.

பாஜகவினர்
ஆனால், கடையை ஆய்வு செய்யாமல் இப்படிச் சொல்வது எந்த விதத்தில் நியாயம். அதிகாரிகளிடம் கூட கேட்காமல் கடையில் சென்று ஆய்வு செய்யாமல் கட்சிக்காரர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு இப்படிக் கூறி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை. இல்லையென்றால் செய்தியாளர்களையே அங்கு அழைத்துச் சென்று மக்களிடம் அரிசி தரத்தைக் காட்டலாம் என இருந்தோம்

மத்திய அரசு தான்
மத்திய அரசின் இந்தியா உணவு கழகத்தின் அதிகாரிகள் தான் அரிசி சப்ளேவை கவனிக்கிறார்கள்.. அப்படியிருக்கும் போது நாங்கள் மாற்றுவதாகக் கூறுகிறார். இதெல்லாம் எப்படி முடியும் மத்திய அரசின் பொது விநியோக துறை செயலாளர் கடந்த அக்டோபர் மாதம் தான் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் மிகச் சிறப்பாக உள்ளதாக மத்திய அரசின் செயலாளர் பாராட்டிவிட்டுச் சென்றார்.

அரசியல் செய்யவே
அவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு மாதம் மாதம் மத்திய அமைச்சர்கள் வந்து ஆய்வு செய்யப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். ரேசன் கடைகளில் இப்போதும் தரமான அரிசி தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications