ஏடிஎம் கொள்ளை விவகாரம்.. இனி மறைமுக கேமராக்களை நிறுவுக..வங்கிகளுக்கு அறிவுறுத்திய சைலேந்திர பாபு!
ஏடிஎம்-களில் மறைமுக கேமராக்கள் பொருத்த சைலேந்திர பாபு அறிவுறுத்தல்.
சென்னை: வங்கிகள், ஏடிஎம்களில் பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் நிறுவ வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் அனைத்து வங்கி பிரதிநிதிகளுடனான ஆலோசனையின் போது, முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் கொண்ட கேமராக்களை ஏடிஎம்களில் பொருத்த வேண்டும் என்றும், ஏடிஎம் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் ரூ.70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் காவல்துறையினருக்கு சவால் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏடிஎம் கொள்ளை
அதேபோல் பிப்.3ம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்-பில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும் திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

ஹரியானாவில் தனிப்படை
மேலும் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதனால் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தகவல்
இதுதொடர்பாக ஐஜி கண்ணன் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் குறிப்பிட்ட நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அனைத்து வகை ஏடிஎம் இயந்திரங்களிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டவில்லை. குறிப்பிட்ட வகை இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.

மறைமுக கேமராக்கள்
இந்த நிலையில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்-களில் பணம் கொள்ளை போனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், வங்கி மற்றும் ஏடிஎம்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எச்சரிக்கை மணி
அதேபோல், அனைத்து ஏடிஎம்-களில் முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை பொருத்த வேண்டும். ஏடிஎம் உடைக்கப்படும் போது, அந்த மையத்திலும் அருகே உள்ள காவல் நிலையத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications