பிளாஸ்டிக் தடை.. மாநில அரசுக்கு உரிமை இல்லையா? மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
பிளாஸ்டிக் தடை வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா என்று மத்திய அரசு பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, மக்காத பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், இதனால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனு தாக்கல்
அதனால், தமிழக அரசு பிறப்பித்த பிளாஸ்டிக் தடை தொடர்பான ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்
அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும், அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது.
வனம், ரசாயன துறை
பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ரசாயன துறை அமைச்சகத்தை ஹைகோர்ட்டு இந்த வழக்கில் இணைத்தது.
4-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
பின்னர், பிளாஸ்டிக் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பாக பிப்ரவரி 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க இந்த இரு அமைச்சகத்திற்கும் சென்னை ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து ஹைகோர்ட் உத்தரவிட்டது.