தங்கம், வெள்ளிக்கு இடையே.. சத்தமே இன்றி உச்சத்திற்கு போன.. வேறு ஒரு ஆபரணம்.. 40 வருட ரெக்கார்ட்
சென்னை: பிளாட்டினம் விலைகள் கடந்த 1 மாதத்தில் கிட்டத்தட்ட 40 வருடங்களில் இல்லாத மிக வலுவான மாதாந்திர ஏற்றத்தைச் சந்தித்துள்ளன.
இந்த டிசம்பர் மாதம் பிளாட்டினம் விலை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாத உயர்வை எட்டியுள்ளது. வலுவான தேவை, குறைவான விநியோகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய கொள்கை மாற்றங்கள் இந்த ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
பிளாட்டினம் விலை ஏற்றம்
ஐரோப்பிய ஒன்றியம், 2035க்குள் பெட்ரோல், டீசல் கார்களை முழுமையாகத் தடை செய்யும் முந்தைய திட்டத்தைக் கைவிட்டது. இம்முடிவு, எரிப்பு இயந்திரங்களின் பயன்பாட்டை நீண்ட காலம் நீட்டித்து, பிளாட்டினம் குழு உலோகங்களுக்கான தேவையை ஆதரிக்கிறது.

வாகனப் புகையைக் குறைக்கும் கேட்டலிடிக் கன்வெர்ட்டர்களில் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் பயன்படுத்தப்படுகின்றன. இம்முடிவால், வாகனங்களில் இவற்றின் பயன்பாடு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய கடுமையான உமிழ்வு விதிகள் ஒவ்வொரு வாகனத்திற்கும் அதிக பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாட்டினம் விலை 33% அதிகரித்த்து
இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பிளாட்டினம் விலை 33% அதிகரித்து, 1986க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஏற்றம் கண்டது. இந்த உலோகம் சமீபத்தில் ஒரு அவுன்ஸ் $2,478.50 என சாதனை அளவைத் தொட்டது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை, பிளாட்டினம் விலை அபாரமாக 146% உயர்ந்துள்ளது.
பல்லேடியம் மற்றும் ரோடியம் உலோகங்களும் இந்த ஆண்டு முறையே சுமார் 80% மற்றும் 95% உயர்ந்துள்ளன. அமெரிக்கா தனது முக்கிய கனிமங்கள் பட்டியலில் இந்த உலோகங்களைச் சேர்த்ததால், அதிகளவு உலோகம் அமெரிக்காவிற்கு நகர்ந்து விநியோகப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வர்த்தக வரிகள் குறித்த நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் இந்த உலோகங்களைப் பாதுகாப்பான தேர்வாகவும் கருதி வாங்குகின்றனர். சீனா சமீபத்தில் பிளாட்டினம் குழு உலோகங்களுக்கான எதிர்கால வர்த்தகத்தைத் தொடங்கி, கணிசமான ஊக முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. பிளாட்டினம் விலையின் எதிர்காலப் போக்கு, சீனாவின் தேவை மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் வர்த்தக வரி முடிவுகளின் தெளிவைப் பொறுத்தது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தங்கமும் நல்ல முன்னேற்றம்
இன்னொரு பக்கம் சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹13,724 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹12,580 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹10,490 ஆகவும் உள்ளது.
2025 ஆம் ஆண்டைத் இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. அந்த வகையில் 2025ம் ஆண்டில் மாதம் மாதம் தங்கம் எவ்வளவு உயர்ந்தது இன்று பார்க்கலாம். அதேபோல் கடந்த ஜனவரியில் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்றும் பார்க்கலாம்.
தங்கம் கடந்த ஜனவரி 2025ல் ஒரு கிராமுக்கு சுமார் ₹7,500இல் தொடங்கியது. உலகளாவிய பணவீக்கக் கவலைகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் கவனமாக வர்த்தகம் செய்தனர். இதனால் டாலர் விலை சரிந்து தங்கம் தொடர்ந்து உயர்ந்தது. பிப்ரவரியில், தங்கம் ஒரு கிராமுக்கு ₹8,100ஐ நெருங்கியது. பாதுகாப்பான முதலீட்டுத் தேவை இதற்கு முக்கிய காரணம்.
மார்ச்சில், ஒரு கிராமுக்கு ₹8,100 - ₹8,200 என தங்கம் நிலையாக வர்த்தகமானது. மத்திய வங்கிகளின் தங்க வர்த்தகமும், நீடித்த பணவீக்கமும் தங்கம் மீதான முதலீட்டாளர் ஆர்வத்தைத் தூண்டின. ஏப்ரலில் சுமார் ₹8,570ஐ எட்டிய தங்கம், மே மாதத்தில் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவால் ₹9,000 என்ற நிலையை அடைந்தது. டிரம்ப் வர்த்தக போர் இந்த சமயத்தில் உச்சம் அடைந்ததும் இதற்கு காரணம்.
2025 ஆம் ஆண்டின் முடிவில், ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ₹13,400ஐ எட்டி, பத்தாண்டுகளில் இல்லாத வலுவான வளர்ச்சியை தங்கம் பதிவு செய்தது. ஜனவரியில் ₹7,500க்கு ஒரு கிராம் தங்கம் வாங்கி, டிசம்பர் இறுதி வரை வைத்திருந்த ஒருவருக்கு, அதன் மதிப்பு ₹13,400 ஆக உயர்ந்தது. இது ஒரு கிராமுக்கு ₹5,900 லாபம் மற்றும் சுமார் 78 சதவிகித வருமானத்தை ஈட்டித் தந்தது.
2025 ஆம் ஆண்டில், தங்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்டகால சொத்து என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியுடன் நிரூபித்தது. அதாவது நான்தான் பாஸ்.. மத்த முதலீடு எல்லாம் தூசு என்று தங்கம் பெரிய பாடம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications