44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்! தமிழகத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு வீரர்கள்!
சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளார்கள்.
செஸ் ஒலிம்பியாட் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;

உக்ரைன் போர்
2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என முன்னெடுத்த முயற்சியின் பலனாக அந்த வாய்ப்பு நமது நாட்டிற்கு அதுவும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்திற்கு கிடைத்தது.

188 நாடுகள்
188 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 2,500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல் நாளான இன்று உஸ்பெகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, செர்பியா, வியட்னாம் என 12 நாடுகளில் இருந்து 32 வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

3 அமைச்சர்கள்
இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து கொடுத்திருக்கிறது. இதேபோல் நாளையும் இன்னும் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு வீரர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவேந்தன், மெய்யநாதன் ஆகிய மூவரும் தொடர்ந்து இது தொடர்பான பணிகளை பின் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
Recommended Video

மாமல்லபுரம்
இதனிடையே மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 28-ஆம் தேதி தொடங்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications