48 அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்? அமித்ஷா - தேமுதிக ரகசிய சந்திப்பு! தேர்தல் அதிகாரியாக ஒரு தமிழ்ப் பெண் ?
சென்னை: திமுகவுக்கு ஆதரவான 48 உயர் அதிகாரிகள் விரைவில் பணியிடை மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல் கசிந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. அண்ணாமலை நடத்தி வந்த 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா வருகின்ற 27 ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைகிறது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.

அதற்காக 27 ஆம் தேதி மதியம் 2 மணிக்குப் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக மீதும் 'இந்தியா' கூட்டணி மீதும் பிரதமர் மோடி நேரடியான சில விமர்சனங்களை வைக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரதமரின் உரையை வழக்கமாக ஹைரன் ஜோஷி என்பவர்தான் தயாரிப்பார். அவரிடம் இந்த முறை தமிழ்நாட்டு அரசியலில் பூகம்பத்தை உருவாக்கக் கூடிய சில 3 விசயங்களை மோடி உரையில் சேர்க்க உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக மத்திய அரசு நிதிப் பகிர்வு குறித்தும், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக திமுக வைக்கும் குற்றச்சாட்டு குறித்தும் விளக்கமாகத் தனது உரையில் பொறிபறக்க பதிலடி தர இருக்கிறார் என்கிறார்கள்.

அதைத்தாண்டி டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் தமிழ்நாட்டு அரசியல் குறித்து சில அப்டேட்ஸ் செய்திகளைத் தெரிவித்திருக்கிறார்.
"இரண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச இருக்கிறார். அதில் ஒரு கூட்டத்தில் மட்டும் அண்ணாமலை பங்கேற்பார். அடுத்து தூத்துக்குடியில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்றுப் பேச உள்ளார். அந்தப் பேச்சு அறிவியல்ரீதியான பேச்சாகவும் கூட்டமாகவும் இருக்கும்.

அதில் காங்கிரசைக் கடுமையாகத் தாக்கி பேசுவார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விண்வெளியில் பாஜக அரசு செய்த சாதனைகள், காங்கிரஸ் அரசு செய்த தாமதங்கள் பற்றி அட்டாக் செய்து பேசுவார்" என்கிறார்
அடுத்து மக்களவைத் தேர்தல் பற்றி சில அப்டேட்டுகளை அவர் தந்துள்ளார்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே நாளில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற முடிவையே தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இன்னும் 10 நாள்களில் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுவிடுவார்கள்.
அருண் பாண்டே என்ற தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்றுள்ளார். அவரது இடம் இன்னும் நிரப்பிடவில்லை. அந்த இடத்திற்கு ஒரு தமிழ்ப் பெண் அதிகாரி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் உலாவுகின்றன.
தேமுதிக நிர்வாகிகள் ரகசியமாக அமித்ஷாவை சந்தித்துள்ளனர். அவர்கள் பிரேமலதாவிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டு சென்றுள்ளனர். பிரேமலதாவுடன் அமித்ஷா நேரடி தொடர்பிலிருந்து வருகிறார். தேமுதிக தரப்பு அதிக டிமாண்ட் வைப்பதாகச் சொல்லப்படுகிறது.

தேமுதிக ஒரு ராஜ்ய சபா சீட் கேட்கிறது. அதை எங்கிருந்து தர முடியும்? 2026இல் யார் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியாது. அதிமுக வருமா? பாஜக வருமா? இல்லை திமுகவே வருமா? விஜய் கட்சி வருமா என இப்போதே சொல்ல முடியாது. ஆக, அந்த ராஜ்ய சபா சீட்டை முன்கூட்டியே தேமுதிகவுக்குத் தருகிறேன் என்று பாஜகவினால் வாக்குறுதி தர முடியாது.
அமித்ஷா நேரடியாக பாமகவுடன் பேசி வருகிறார். அடுத்து தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளுக்குச் சின்னம் கிடைக்குமா என்று கவலை எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

விசிக பானை சின்னம் கேட்கிறது. விசிகவுக்கு பானை கிடைக்கவில்லை என்றால், அது திமுகவுக்குச் சாதகமாகவே முடியும். ஸ்டாலின் நேரடியாக உதயசூரியனிலேயே நிற்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்.

சீமான் சின்னத்தைப் பொறுத்தவரைக் கரும்பு விவசாயி சின்னத்தில் கூடுதலாக ஒரு படத்தைச் சேர்த்து அதைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கி விடும் என்றே தகவல்கள் கிடைத்துள்ளன. இன்று தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதில் சின்னம் பற்றிய முடிவை அதிகாரிகள் எடுத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
2 நாட்கள் முன்னால் அமலாக்கத்துறை இயக்குநர் சென்னையிலிருந்தார். அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் அலுவலக ரீதியான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார்.

அப்போது தேர்தலுக்கு முன் எப்படி அமலாக்க இயக்குநரகம் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்துள்ளனர். அந்தக் கூட்டத்தில் 48 அதிகரி கள் திமுகவுக்கு ஆதரவானவர்கள் என அக்கூட்டத்தில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை இடமாற்றம் செய்வதற்கான ஆணை விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.
டிஜிபி மேல் கைவைக்கமாட்டார்கள். ஆனால், கூடுதல் டிஜிபி 2 பேர் அமலாக்கத் துறை பார்வை வளையத்திற்குள் உள்ளனர் என்பது உறுதி" என்கிறார்












Click it and Unblock the Notifications