தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்.. 20ம் தேதி தொடங்கி வைக்கும் மோடி.. எந்த ரூட் தெரியுமா?
சென்னை: பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக 3 வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து பிரதமர் மோடி தேசிய ஜனநாய கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், பீகாரின் நிதிஷ் குமார், ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் மோடி பிரதமர் ஆக ஆதரவு அளித்து இருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர், சென்னை விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வரை பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ரயில், முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications