இவங்க இப்படி பேசுறாங்களா? அடுத்து பிரதமர் மோடி வந்து அப்படி பேசுவார் பாருங்க.. சு.வெங்கடேசன் கிண்டல்
சென்னை: நாடாளுமன்ற லோக்சபாவில் வெளிப்படையாக எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு பாஜக அமைச்சர் மிரட்டல் விடுக்கிறார், அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் பேசினர். மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக்கொண்டிருக்கும்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் கோபமடைந்த மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என எச்சரித்தார். எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை மத்திய பாஜக அரசு ஏவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜக அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. 'இந்தியா' என கூட்டணிக்குப் பெயர் வைத்ததற்கு எதிராக பாஜக எம்.பிக்கள் ராஜ்யசபாவில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 நிகழ்வுகளையும் குறிப்பிட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். பாஜக மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டுகிறார், ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஐஎம் எம்.பி சு.வெங்கடேசன்.
“அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத்துறை உங்களது வீட்டுக்குவரும்” என்று மக்களவையிலும்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 4, 2023
“இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்” என்று மாநிலங்களவையிலும்
இந்த வாரம்
ஆளுங்கட்சியினர் பேசியுள்ளனர்.
அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார். pic.twitter.com/EPa0ILHFwO
சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " "அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத்துறை உங்களது வீட்டுக்குவரும்" என்று மக்களவையிலும் "இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்" என்று மாநிலங்களவையிலும் இந்த வாரம் ஆளுங்கட்சியினர் பேசியுள்ளனர். அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார்." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications