மகளிருக்கு இலவச பஸ் பயணம் ரத்தாகுமா? மெட்ரோ ரயில் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன?
சென்னை: இன்றைக்கு தமிழ்நாடு போலவே கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, பஞ்சாப், ஒடிசா என்று பல்வேறு மாநிலங்களில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய மெட்ரோ நகரங்களில் மெட்ரோ ரயில்கள் போடப்பட்டு வரும் நிலையில், அங்கு இலவச பேருந்து பயணம் தந்தால், மெட்ரோ ரயில்கள் எப்படி லாபத்தில் இயங்கும் என்று சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அதில் இலவச பேருந்து பயணத்தால் மெட்ரோ உருவாகாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொடங்கி இந்தியாவில் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், அவர்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தவும் இலவசப் பேருந்து திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. இதில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், பாஜக ஆளும் மாநிலங்கள் என்று இல்லை. பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு விடியல் பயணம்
திமுக ஆளும் தமிழ்நாட்டில் விடியல் பயணம் என்ற பெயரில் 2021 முதல் நடைமுறையில் இருக்கிறது. சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணமில்லாப் பயணத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
கர்நாடகா தெலுங்கானா
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சக்தித் திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் மாநில எல்லைக்குள் இலவசப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்தில் மகாலட்சுமி திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. தெலுங்கானா மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்க முடியும்.
இலவச பேருந்து பயணம்
பாஜக ஆளும் டெல்லியில் மாநகரப் பேருந்துகளில் பெண்கள் "பிங்க் டிக்கெட்" பெற்று இலவசமாகப் பயணிக்கலாம். இதுவே இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலதில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் வழங்கப்படுகிறது. பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் லக்ஷ்மி திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகள் மற்றும் பஞ்சாயத்து அளவில் பெண்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் அல்லது இலவசப் பயணத்தை அரசு வழங்கி வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர மாநில அரசு (தெலுங்கு தேசம் அரசு) தமிழகத்தைப் போலவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடர்கிறது.
மெட்ரோ ரயில் சேவை
இதனிடையே மகளிருக்கு இலவச பேருந்து பயணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஊடகம் ஒன்றில் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறும் போது, இப்போது பாருங்கள் என்ன நடக்கிறது என்று.. நீங்கள் ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்குகிறீர்கள்.. ஆனால் அதே நகரத்தில் பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் வழங்குவோம் என்று சொல்கிறீர்கள்..
50 சதவீதம் பயணிகள் வரமாட்டார்கள்
அதாவது, உங்கள் மெட்ரோவின் 50 சதவீதப் பயணிகளை நீங்கள் பறித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.. மெட்ரோ லாபகரமாக இயங்காது. எதிர்காலத்தில் மெட்ரோ எப்படி உருவாகும்? இதுதான் என் கவலை. இந்த கோணத்தில் யாருமே சிந்திப்பதோ அல்லது விவாதிப்பதோ இல்லை.. நாம் எப்போதும் அரசியல் ரீதியான வாக்குவாதங்களில் இறங்கி விடுகிறோம். எனக்கு அது பிடிக்காது.. நான் மிகத்தெளிவான ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்..
மோடி கூறியது என்ன
பேருந்துகளில் இவ்வாறு செய்வதால் ஒருபுறம் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. மறுபுறும் மெட்ரோவையும் காலி செய்துவிடுகிறீர்கள்.. இப்போது அந்த மெட்ரோ எப்படி முன்னேறும்.. நாடு எப்படி முன்னேறும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அந்த வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். அதேநேரம் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இலவச பேருந்து பயணம் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் குறிப்பிடவில்லை.












Click it and Unblock the Notifications