“அடடா.. இப்படி ஒரு வரவேற்பு இதுவரை இல்லையே?” - காரை விட்டு இறங்கி உற்சாகமாக கையசைத்த பிரதமர் மோடி!
சென்னை : தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதால் பிரதமர் மோடி உற்சாகமடைந்துள்ளார்.
Recommended Video
பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் வரவேற்றனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு ஐ.என்.எஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகிறார்.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, அவர் அடையாறு ஐ.என்.எஸ் விமான தளத்திலிருந்து காரில் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் வழி நெடுக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருக்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதையடுத்து வாகனத்தில் இருந்து வெளியே இறங்கி தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் பிரதமர் மோடி.
கடந்த அதிமுக ஆட்சியின்போதெல்லாம் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சியினர் கருப்புக்கொடி காட்டப்படுவது வழக்கம். ஆனால், இன்று அதுபோல எதிர்ப்புகள் இல்லாமல் மிக விமரிசையான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கான வரவேற்பு கிடைத்துள்ளதால் பிரதமர் மோடியும் மிகவும் உற்சாகமடைந்து காரில் இருந்து வெளியே வந்து கையசைத்துள்ளார்.