நான் தமிழ்நாட்டுக்கு வந்தால் சிலர் வயிற்றில் புளியை கரைக்கிறது.. பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!
சென்னை: சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, "சமீப சில காலமாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது." எனப் பேசியுள்ளார்.
ஒரு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சென்றார். அங்கு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாவனி என்கிற 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வு முடிந்த பிறகு, சென்னை விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் வருகை தந்தார். அப்போது, பாஜக சார்பில் வழிநெடுகிலும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் மோடி. 'மீண்டும் மோடி சர்க்கார்' என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி பேசுகையில், "சென்னைக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் எனக்கு வலிமை கிடைக்கிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளி, அழியாப்புள்ளி சென்னை. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை முக்கியப் பங்கு வகிக்கிறது.
சென்னை நகரம் மிகப் பழமையானது. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு நீண்டது. என் மீதான உங்கள் அன்பு மிகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், சமீப சில காலமாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு வலுவடைகிறது என்பதால் சிலர் அச்சப்படுகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக வலிமை பெற்றுள்ளதை காட்டுகிறது சென்னை பொதுக்கூட்டம். வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதோடு, வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு என்பதும் மோடியின் இலக்கு." என உரையாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications