தமிழக அரசியலின் "சைலன்ட் ஜெயன்ட்"டாக உருமாறும் பாமக..!
பாமக கூட்டணி யாருடன் என்பது இன்னமும் முடிவாகவில்லை
Recommended Video
சென்னை: பெரிய கட்சிகள் யாராக இருந்தாலும் சரி பாமகவை விட்டு விடக்கூடாது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
ஜெயலலிதா இறந்ததற்கு முன்னாகட்டும், அதற்கு பின்னாகட்டும், ஒருவித சுணக்கத்துடனே பாமக பயணித்தது. ஆனால் அன்புமணி மிக விவரமாகவும், விவேகமாகவும், மக்களை சந்தித்து அதன் மூலம் விட்டுப் போன தொடர்பை மீண்டும் புதுப்பித்து வர தொடங்கினார்.
தற்போது கஜா புயல் வந்ததும், பல சத்தமில்லாத வேலைகள் பாமக தரப்பில் வேகமாக நடந்தது. அன்புமணி ஒரு பக்கம் என்றால், ஜி.கே.மணி மக்களிடத்திலேயே நேரடியாக போய்விட்டார். நிறைய உதவிகள் பாமக தரப்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒப்பிட வேண்டாம்
ஆனால் கூட்டணி குறித்து மட்டும் இன்னும் மூச்சு விடவில்லை. ஒரு தொலைக்காட்சி பேட்டியில், நீங்கள் டிடிவியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று அன்புமணியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "எலக்ஷன் வரும்போது அதை பத்தி சொல்றேன். ஆனா எங்க கட்சி 30 வருஷமா இயங்கிட்டு வருது. திமுக, அதிமுகவுக்கு பிறகு பெரிய கட்சி நாங்கதான். எங்களுக்குன்னு ஒரு அனுபவம் இருக்கு. இந்த சூழலில் தினகரனுடன் எங்கள் கட்சியை ஒப்பிடுவது தேவையில்லாதது" என்று சொன்னார். அப்படி என்றால் தினகரனை தேடி இவர்கள் பாமக போகாது என்று மட்டும் விளங்குகிறது.
அதிமுக, திமுக?
அதேபோல, ஆ.ராசா ஒருமுறை அளித்த பேட்டியில், "பாமக, தேமுதிகவை அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு. அவர்களை கூப்பிட்டு எங்கள் சுயமரியாதையை இழக்க தயாரில்லை" என்றார். அப்படியென்றால் திமுக பக்கமும் பாமக போகாது போல இருக்கிறது. அதிமுக பக்கம் போகவே மாட்டோம் என்று பலமுறை அன்புமணி சொல்லி விட்டார்.
யாருடன் கூட்டணி
"இந்த முறை கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். ஆனால் திமுக, அதிமுக, கூட்டணியில் இல்லை என்று தெரிந்து விட்டது. அப்படியானால் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது பாமக?
"கலர்" மாறுகிறது
எப்படி பார்த்தாலும் முன்பு இருந்த பாமக இப்போது இல்லை. நிறைய மாறுதல்களுடன் பலம் பொருந்தி வருகிறது. வன்னியர் கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டே வந்த நிலையில், திடீரென்று சம்பந்தமே இல்லாமல் நடிகர் ரஞ்சித்துக்கு பொறுப்பு கொடுத்து தன் மேல் உள்ள "கலரை" மாற்ற முயன்றது. இதைதவிர நடிகர் சந்தானத்தை வேறு கட்சிக்குள் இழுப்பதாகவும் கூறப்பட்டது.
கடின உழைப்பு
ராமதாசை விட அன்புமணியின் செயல்பாடு மக்களை விரைவாக சென்றடைய ஆரம்பித்துவிட்டது. மதிமுகவைவிட, விடுதலை சிறுத்தையைவிட, பாஜகவைவிட பாமக இப்போது வலுவாகவே உள்ளது. எனவே பெரிய கட்சிகள் யாராக இருந்தாலும் சரி, பாமகவை யார் பயன்படுத்தி கொண்டாலும் அது அவர்களுக்குத்தான் நல்லது என்ற நிலைமையை அன்புமணி தன் கடின உழைப்பால் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்.