விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! பாமக வேட்பாளரும் அறிவிச்சாச்சே! அதிமுக தாமதிப்பது ஏன்?
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக, நாம் தமிழர், பாமக ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் அதிமுக ஏனோ தாமதிக்கிறது.
திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி காலமாகிவிட்டார். இதையடுத்து அந்த தொகுதி ஏப்ரல் 8ஆம் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

இதனால் லோக்சபா தேர்தலுடன் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றது.
இந்த நிலையில் விக்கிரவாண்டிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுக்கள் பெறும் பணிகள் ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும். மிக குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன. அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, யாரை பொறுப்பாளராக நிறுத்துவது போன்ற விவகாரங்களை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த 11 ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி, கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் திமுகவின் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அன்னியூர் சிவா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவரணியிலும் அவர் இருந்துள்ளார்.
அது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் சார்பில் ஓமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இவர் அண்மையில் நடந்து முடிந்த தருமபுரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு 65,381 வாக்குகளை பெற்றிருந்தார். இவரையே தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளராக சீமான் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டிஇடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆயினும் அதிமுக, பாமக சார்பில் போட்டியிடுபவர் யார் என்பதை இதுவரை அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது சி.அன்புமணி என்பவர் போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் அபிநயா, பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதிமுக தங்கள் வேட்பாளரை எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications