இளைஞர்கள் நெக்ஸ்ட்; சீனியர்களுக்கு ரெஸ்ட்; பாமகவின் புது பிளான்; விரைவில் விறுவிறு மாற்றம்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சி அமைப்புகளில் உள்ள சீனியர் நிர்வாகிகளுக்கு பதில் துடிப்புமிக்க இளைஞர்களை பொறுப்புகளுக்கு கொண்டுவர அன்புமணி ராமதாஸ் விரும்புவதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாமகவில் முதல் முறையாக ஊடக ஒருங்கிணைப்பாளர் என்று ஒரு பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவியில் மணிகண்டன் அமர்த்தப்பட்டார்.மேலும் சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் நடைபெற்ற நிலையில் இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சீனியர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து அவர்களை கட்சியின் ஆலோசகர்களாக வைத்துக்கொள்ளவும் ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாமக
திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சவால் விடக் கூடிய வகையில் வட தமிழகத்தில் வலிமையாக இருக்கக் கூடிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. காஞ்சிபுரத்தில் தொடங்கி அரியலூர் வரையும் கொள்ளிட கரையான மயிலாடுதுறையில் தொடங்கி தமிழக எல்லையோர மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி வரை பாமகவுக்கான செல்வாக்கு இன்னும் சீராக உள்ளது. இதற்கு சமுதாய ரீதியான கட்டமைப்பும், அதையொட்டிய செயல்பாடுகளும் தான் காரணமாக கருதப்படுகிறது.

தேர்தல்
இப்படி கட்சியை வலிமையான கட்டமைப்போடும், கட்சியினரை உணர்வோடும் வழிநடத்தி வரும் பாமக தலைமைக்கு, தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியவில்லையே என்ற ஏக்கமும், வருத்தமும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இதனால் தற்போதைய சூழலில் கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சுவது அவசியம் என்பதை உணர்ந்து இப்போது அது தொடர்பாக ஆலோசனைகளில் பாமக தலைமை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துடிப்புமிக்க
மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள சீனியர்கள் இடத்திற்கு துடிப்புமிக்க இளைஞர் பட்டாளத்தை கொண்டு வருவதுடன் கட்சியில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்கவும் அன்புமணி ராமதாஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்னரே அன்புமணி தொடங்கிவிட்டார். அதாவது பாமக வரலாற்றில் முதல் முறையாக ஊடக ஒருங்கிணைப்பாளர் என்று ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவியில் மணிகண்டன் அமர்த்தப்பட்டார். இவர் கடந்த பல வருடங்களாக அன்புமணி ராமதாசுக்காக ஊடக விவகாரங்களை கவனித்துக் கொண்டவர். அதில் திறம்பட செயல்பட்டதால் புதிய பதவி கொடுக்கப்பட்டது. இதே போல் பாமகவில் இதுவரை இருந்த மாநில துணை பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டுவிட்டது. அத்தோடு, புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தை சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் விரைவில் பாமகவில் விறுவிறு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்தலைவர்
தற்போது பாமக தலைவராக கோ.க.மணி உள்ள நிலையில், வயது முதிர்வு காரணமாக அவரால் முன்பை போல் இயங்கமுடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அது தொடர்பான தொகுதிப் பணிகளும் அவருக்கு நிறைய உள்ளன. இதனால் அன்புமணி ராமதாசுக்கு இளைஞரணித் தலைவர் பதவியிலிருந்து பாமக செயல் தலைவர் என்ற புரோமோஷனும் விரைவில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications