தைலாபுரத்தை "ஸ்டன்" ஆக வைத்த இபிஎஸ்.. முக்கிய நிர்வாகியை தூக்கி பாமகவிற்கு நெருக்கடி.. என்ன நடந்தது?
சென்னை: பாமக கட்சியின் முக்கியமான நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்து இருப்பது பாமக நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. ஊரக உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்க போகிறோம் என்று பாமக தெரிவித்தது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக பாமக கூட்டணி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக முறிந்தது.
இதை பற்றி கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக தலைமை சரியில்லை. அதிமுக நிர்வாகிகளை தலைமையால் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சனம் வைத்து இருந்தார்.

விமர்சனம்
இந்த நிலையில்தான் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாவது அதிமுக கூட்டணியோடு பாமக இணையுமா என்று கேள்வி நிலவி வந்தது. ஆனால் 2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2022-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற பெயரில் பாமக நடத்திய பொதுக்கூட்டத்தில் தனி அணி அமைப்பது குறித்து பேசப்பட்டது. அதாவது அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம். நாம் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

ஆட்சி
பாமக தலைமையில் தனி அணி உருவாக்கப்படும். வன்னியர்கள் பலர் இருந்தும் நம்மால் முதல்வர் ஆக முடியவில்லை. இனி அதை நாம் சாத்தியமாக்க வேண்டும். இனி பாமகவுக்கு மட்டுமே தேர்தலில் வேலை செய்ய வேண்டும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம். இதற்காக நாம் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டை பாட்டாளி ஆள வேண்டும். அது கடினம்தான் என்றாலும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வாய்ப்பு இல்லை
இதனால் இனி அதிமுக - பாமக கூட்டணி சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவுடன் மீண்டும் பாமக கூட்டணி வைக்குமா.. இல்லை மொத்தமாக இந்த கூட்டணி முடிவிற்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், தைலாபுரத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாமக கட்சியின் முக்கியமான நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்து உள்ளார். அக்கட்சியின் மாநில துணை செயலாளரான திருஞானம் அதிமுகவில் இணைந்துள்ளார்.

சேரவில்லை
சமீப நாட்களாக பாமக நிர்வாகிகள் பெரிய அளவில் திமுகவில் சேர்ந்தார்களே ஒழிய அதிமுகவில் இணையவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

அதிமுக பாமக
மேலும் அரூர் பேரூர்ச் செயலாளர் கி.அய்யப்பன், அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி, லட்சுமணன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஆனால் பாமக நிர்வாகிகள் பெரிய அளவில் அதிமுகவில் இணையவில்லை. ஆளும் கட்சி என்பதால் திமுகவில்தான் இணைந்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் பாமக - அதிமுக நட்பில் மேலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் பாமக மாநில துணை செயலாளரான திருஞானம் அதிமுகவில் இணைந்துள்ளார்.

மேலும்
தென்தமிழ்நாட்டில் பாமகவுக்கு இது இன்னும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக பேசி வரும் நிலையில் அக்கட்சியின் நிர்வாகியை அதிமுக தன் பக்கம் இழுத்துள்ளது. அதோடு இவர் சிவகங்கை மாவட்ட பாமக செயலாளர். இதனால் பாமகவிற்கு தென் மாவட்டங்களில் இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications