தைலாபுரத்தில் புகுந்த ’ஆமை’..பாமக பஞ்சாயத்துக்கு ’இவங்க’ தான் காரணம்! பரபரப்பை கிளப்பும் பாட்டாளிகள்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதலால் ஏற்கனவே பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே தைலாபுரத்தில் இருக்கும் 'நபர்கள்' 'வெளிநபர்களை' வைத்து பிரச்சனை செய்வதாகவும், இது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள். மேலும் தமிழகத்தின் 'பிரதான' அரசியல் கட்சி ஒன்றும் பாமக விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த நினைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவரான அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதோடு செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்ததில் இருந்தே பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது.
அதற்குப் பிறகு நடந்த வன்னியர் சங்க மாநாட்டிலும் ராமதாஸ்-ன் பேச்சு கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் புயலை கிளப்பியது. அன்புமணி ராமதாஸோ, ராமதாஸின் கனவை நிறைவேற்றுவோம்.. ஐயா வழியில் நடப்போம் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அன்புமணியின் தாயை அடிக்க பாய்ந்தார், பாட்டிலை வீசினார் என்றெல்லாம் அவர் கூறிய கருத்துக்கள் பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து சில நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்ட நிலையில் அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்ததாக அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி ராமதாஸ் நடத்தினார். இதை அடுத்து அந்த கூட்டங்களில் பங்கேற்றவர்களை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்தார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு இடையே ராமதாஸுக்கு ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பின்னால் நிற்கின்றனர்.
பரபரப்பான இந்த சூழலில் தான் டெல்லி புறப்பட்டு சென்றார் அன்புமணி ராமதாஸ். கட்சியின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னால்தான் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் நீக்கம் ஆகியவற்றை செய்ய முடியும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவை தான் எடுக்க முடியும் என்பதை தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலேயே இந்த பயணம் அமைந்திருப்பதாக சொல்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தைலாபுரத்தில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. ஜிகே மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து ராமதாஸுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்கள் கட்சியினர் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், கடந்த சில தினங்களாகவே பாமகவில் வெளிநபர்களின் தலையீடு அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். தைலாபுரத்தில் இருக்கும் 'சிலர்' பாமக விவகாரங்களை வெளி நபர்களை வைத்து பிரச்சினை செய்வதாக கூறுகின்றனர்.
பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரும், சென்னையின் 'பிரபலம்' ஒருவரும் தைலாபுரத்துக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. நட்பு அடிப்படையில் தான் அவர்கள் பேசியதாக சொல்லப்பட்டது. அதற்குப் பிறகு சில கட்சி தலைவர்களும் இன்னும் வேறு சிலரும் அடிக்கடி தைலாபுரம் சென்று வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தைலாபுரத்தை கண்டு கொள்ளாத சில முக்கிய புள்ளிகள் தற்போது அடிக்கடி படையெடுத்து வருகின்றனர். மேலும் வெளியில் நடப்பதை ராமதாஸிடம் சொல்லி தந்தை மகன் இடையேயான மோதலை அவர்கள் மேலும் தீவிரமாக்கி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
மேலும் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சி ஒன்று, பாமக விவகாரங்களில் முழு ஈடுபாடு காட்டுவதாக சொல்லப்படுகிறது. தங்கள் கூட்டணிக்கும் வரக்கூடாது, பிற கூட்டணிக்கும் செல்லக்கூடாது என பாமகவை அலைக்கழிக்க வைக்க தந்தை மகன் இடையேயான போதலை அந்த கட்சி தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவில் இருக்கும் ஒரு சில எம்எல்ஏக்கள் அந்த அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே தந்தை மகன் இடையேயான மோதல் இதுவரை முடிவுக்கு வரவில்லை என்கின்றனர். அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் அவர் வந்த பிறகு சமூகத் தீர்வு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications