Ramadoss Spy: “என் வீட்டில் நான் உட்காரும் இடத்திற்கு அருகே ஒட்டுக்கேட்கும் கருவி".. ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!
விழுப்புரம்: தனது வீட்டில் தான் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவர் செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார்.

ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்று அன்புமணி கூறி வருகிறார். இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களுக்கு அன்புமணி மீண்டும் பதவி வழங்குவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏவாக இருக்கும் அருள் பதவியை பறித்து அன்புமணி அறிவித்தார். தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என அருள் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட்ட லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. ராமதாஸின் புதிய நிர்வாகி நியமனம் அறிவிப்பு லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக ராமதாஸ் லெட்டர் பேட்டில் நகல்கள் என செயல் தலைவர் அன்புமணி பெயர் இருக்கும். நேற்று வெளியான நியமன அறிவிப்பில் அன்புமணிக்கு நகல் அனுப்பப்படவில்லை.
பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நேற்று ஒருபடி மேலாகச் சென்று அன்புமணி தனது பெயருக்குப் பின்னால், என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், வேன்றுமென்றால் இனிஷியலாக முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று கூறினார்.
பாமகவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர், ராமதாஸ் - அன்புமணி இணைந்து பேசி சுமூகமான நிலையை எட்ட வேண்டும் எனக் கூறி வருகின்றனர். ஆனால், ராமதாஸ் - அன்புமணி இடையே இன்னும் மோதல் போக்கு முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்நிலையில் இன்று விருத்தாசலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டில் அந்தக் கருவி இருந்ததை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.
"என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். ஒட்டு கேட்கும் கருவியை யார் எதற்காகப் பொருத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் லண்டலில் இருந்து விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவியை வாங்கி பொருத்தி உள்ளனர்" என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications