ராமதாஸ்தான் மன உளைச்சலுக்கு "காரணம்.." அதிமுக-பாமக கூட்டணிக்குள் குண்டு போடும் ஆர்.எஸ்.பாரதி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அந்த மாநில முதல்வரை வலியுறுத்தியது பாமக நிறுவனர் ராமதாஸ் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுகவினர் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில் ஆர்.எஸ்.பாரதி இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் தோல்வி பயத்தால் போலி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மன உளைச்சல்
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ததே அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றும் ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு துரோகம்
கடந்த 2015ம் ஆண்டு பாமக தலைவர் ராமதாஸ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாமக தலைவர் ராமதாஸை கூட்டணியில் சேர்த்துள்ளது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம் கிடையாதா என கேள்வியெழுப்பினார்.

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு
ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் ராமதாஸ், ஜெயலலிதா மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்த ராமதாஸை கூட்டணியில் சேர்த்துவிட்டு எங்களை குறை கூறுவது நியாயமா என்றும் ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கு நாங்கள் மட்டும் காரணமல்ல திமுக சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் கர்நாடக அரசுக்கு பாமகதான் அரசியல் ரீதியிலான அழுத்தத்தை அளித்தது.

எம்ஜிஆர் எங்களுக்கும் உரிமையுள்ளவர்
எம்.ஜி.ஆரை உருவாக்கியதே நாங்கள்தான் என்றும் எம்.ஜி.ஆர் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. இவ்வாறு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications