பாமகவில் காந்திமதிக்கு பதவி! அன்புமணிக்கு ராமதாஸ் செக்? அப்போ செயல்தலைவர்?
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பாமக நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாமக நிறுவனர் ராமதாஸ் பிறப்பித்தார்.
அண்மையில் பாமக பொதுக் குழு கூட்டம் நடந்த போது கூட ராமதாஸுக்கு அருகில் மகள் காந்திமதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறித்து மகள் காந்திமதிக்கு வழங்க ராமதாஸ் திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் காந்திமதிக்கு 21 பேர் கொண்ட பாமக தலைமை நிர்வாக குழுவில் உறுப்பினர் பதவியை ராமதாஸ் கொடுத்துள்ளார். ஏற்கெனவே காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனுக்கு பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்ததால்தான் அன்புமணி தனது எதிர்ப்பை காட்டினார்.
இதனால்தான் தந்தையும் மகனும் பிரிந்துள்ளனர். இந்த இடைவெளி அதிகரிப்பால் பாமக தலைவர் பதவியையும் அன்புமணியிடம் இருந்து ராமதாஸ் பறித்து செயல் தலைவர் பதவியை கொடுத்தார். ஆனால் அன்புமணி செயல்தலைவர் பதவியை ஏற்க மறுத்தார்.
இதனால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே மோதலும் இடைவெளியும் அதிகரித்தது. இருவரையும் சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் முயற்சித்தனர். ஆனால் தலைவர் பதவியை இருவரும் விட்டுத் தர மறுத்து பிடிவாதம் செய்வதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் கூட தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளுக்கு தைலாபுரத்திற்கு அன்புமணி, அவரது குடும்பத்தினருடன் சென்று கேக் வெட்டி மகிழ்ந்தார். அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் சமாதானம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை ராமதாஸ் மறுத்தார். மேலும் தான் திட்டமிட்டப்படி பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் உறுதி செய்திருந்தார். அதன்படி பொதுக் குழு கூட்டம் கூடியது. அதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அண்மைக்காலமாக மகள்கள் காந்திமதி, கவிதா ஆகியோருக்கு ராமதாஸ் முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதும் கூட மூத்த மகள் காந்திமதிக்கு ராமதாஸ் தனது கட்சியில் பதவி வழங்கியுள்ளார். அன்புமணியின் மனைவி, மகள்கள் அரசியலில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், தற்போது தனது மகளுக்கு பதவி கொடுத்துள்ளது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி எதிராக தனது மகளை நிறுத்துகிறாரா, இல்லை சவுமியா அன்புமணி அரசியலில் ஈடுபடுவதற்கு எதிராக காந்திமதி மூலமாக செக் வைக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது காந்திமதிக்கு கட்சியில் பதவி கொடுப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்ட போது, "போக போகத் தெரியும்" என பாடி பதில் அளித்தார். இதனால் விரைவில் காந்திமதிக்கு, ராமதாஸ் பதவி அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அன்புமணி ஏற்க மறுக்கும் செயல் தலைவர் பதவி காந்திமதிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை காந்திமதிக்கு, ராமதாஸ் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications