ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில்.. அன்புமணி தலைமையில் தொடங்கிய பாமக பொதுக்குழு கூட்டம்!
சென்னை: அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி இருக்கிறது. ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. மேடையில் ராமதாஸ்-க்கு ஒருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்கவில்லை. பாமக வரலாற்றில் ராமதாஸ் பங்கேற்காத முதல் பொதுக்குழு இதுவாக அமைந்திருக்கிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. பாமகவின் பொதுக்குழுவை இன்று அன்புமணி கூட்டி இருந்த நிலையில், ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை முன் வைக்க வழக்கறிஞர்கள் தயாரான போது, நீதிபதி ஒரு கோரிக்கை வைத்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாமகவின் நலன் கருதி ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறேன். மாலை 5.30 மணிக்கு இருவரையும் எனது அறைக்கு வரச் சொல்லுங்கள். ராமதாஸை உடனடியாக புறப்பட சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் உடல்நிலைக் காரணமாக ராமதாஸ் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்பின் ராமதாஸ் வீடியோ கான்ஃபெரன்ஸில் ஆஜராக, அன்புமணி மாலை 5.30 மணிக்கு நேரில் ஆஜராகினார். சுமார் 50 நிமிடங்கள் நடந்த விசாரணைக்கு பின், ராமதாஸ் தனது தரப்பு கருத்துக்களை கூறினார். இந்த விசாரணையின் போது வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவையென்றால் ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டார். இதனால் அன்புமணி தரப்பு குஷியாகியது.
இதனால் அன்புமணி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மாமல்லபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு பாமக பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழு மேடையில் ராமதாஸ்-க்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ராமதாஸ் பங்கேற்கவில்லை. இந்த பொதுக்குழுவில் அன்புமணியே தலைவர் என்றும், கூட்டணித் தொடர்பாக முடிவு எடுக்க அன்புமணிக்கு மட்டுமே உரிமை வழங்கி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications