எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.. அதிமுகவிடம் கறாராக பாமக பெற்ற அந்த ஒரு ராஜ்யசபா சீட் யாருக்கு?
Recommended Video
சென்னை: அதிமுகவிடம் பாமக கறாராக கேட்டு பெற்ற ஒரு ராஜ்யசபா சீட் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் என்று வரும் போது நேற்று வரை எதிரி இன்று பங்காளியாவார். இன்று நண்பராக இருந்தவர் நாளை பகைவனாவார் என்பது நியதி. எனவே ஆட்சி அமைத்தவுடன் எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறி கொள்வது அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற நிலை வந்துவிட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் கொடிக் கட்டி பறக்கின்றன. பழைய விமர்சனங்களும் சபதங்களும் காற்றோடு போய்விட்டன.
கூட்டணி
இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு பொருந்தும். ஜெயலலிதா இருந்த போது நல்ல மானமுள்ளவன் அவருடன் கூட்டணிக்கு செல்லமாட்டான் என கூறிய பாமக அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது ஒன்றும் புதிதல்ல.
பாமக கூட்டம்
அதுபோல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்களில் முக்கியமானவர் ராமதாஸ். அதை அவர் மறந்திருந்தாலும் அவரது டுவிட்டர் பக்க பதிவுகள் இன்னும் நினைவுப்படுத்தும். இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திண்டிவனத்தில் நடந்த பாமக கூட்டத்தில் அன்புமணி சூளுரைத்தார்.
பதவி யாருக்கு
ஆனால் அதை மறந்து தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. அதில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகளை பெற்றது. மேலும் ஒரு ராஜ்யசபா பதவியையும் கேட்டு பெற்றது. தற்போது இந்த பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ்
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக, மொத்தம் 8 தொகுதிகளை கேட்டு கெத்தாக பெற்றது. ஆனால் அதில் ஒன்றில் மட்டுமே பெற்றுள்ளது. அது தருமபுரி மக்களவை தொகுதி. அதன் எம்பி அன்புமணி ராமதாஸ் ஆவார்.
பாமக
தருமபுரி தொகுதிக்கு அன்புமணி ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளதாக கூறப்படுவதால் அவர் மீண்டும் அதே தொகுதியிலோ அல்லது வேறு தொகுதியிலோ போட்டியிடலாம் என தெரிகிறது. இந்த நிலையில் பாமக கேட்டு பெற்ற மாநிலங்களவை சீட், பாமகவின் மூத்த தலைவர்களுக்கோ அல்லது அன்புமணியின் மனைவி சவுமியாவுக்கோ அளிக்கப்படலாம் என தெரிகிறது.
மக்கள்
சவுமியா பசுமை தாயகம் என்ற திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு ஒரு அரசியல் பலம் வேண்டி இந்த ராஜ்யசபா சீட்டை பாமக கேட்டு பெற்றிருக்கலாம் என தெரிகிறது. என்னதான் அன்புமணி தருமபுரி தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்திருந்தாலும் அதிமுக- பாஜகவுடன் பாமக இணைந்ததை அவர்கள் சமூகத்து மக்களே விரும்பியிருக்க மாட்டார்கள்.
வியூகம்
இதனால் கடந்த முறை போல் மொத்த தொகுதியிலும் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்பதற்காக எதற்கும் அன்புமணிக்கே கூட இந்த சீட் உதவலாம் என வியூகம் வகுத்தே இந்த ஒரு சீட் கேட்டு பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பதவிதானே பாலிசி என்ற அடிப்படையில் எல்லாம் நடக்கிறது போலும்!