அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி?.. ஜி.கே.மணி ஆவேசம்
கேஎஸ் அழகிரியை சரமாரியாக விமர்சித்து ஜிகே மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் கேஎஸ் அழகிரி தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன் என ஜிகே மணி கேள்வி எழுப்பி உள்ளார். வாக்குகளை வாங்கும் வரை ஒரு பேச்சு, வாக்குகளை வாங்கி முடித்த பின்னர் வேறு பேச்சு என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் நம்பிக்கை துரோகம் என்றும் அழகிரியை ஜிகே மணி விமர்சித்துள்ளார்.
8 வழிச்சாலையை ஆதரிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி அளித்திருந்தார். இது சம்பந்தமான சர்ச்சை கருத்துகள் வெடிக்க தொடங்கியதும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்து ட்வீட் போட்டிருந்தார்.
இதையடுத்து, கேஎஸ் அழகிரி, எதற்காக 8 வழிச்சாலையை ஆதரிக்கிறோம் என்பதை விளக்கி அறிக்கையும் பேட்டியும் தந்திருந்தார். இந்நிலையில், அழகிரியின் விளக்கத்தினை பாமக தலைவர் ஜிகே மணி விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:
"சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறி 5 மாவட்ட விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி பெருந்துரோகத்தைச் செய்திருக்கிறது. அதை நியாயப்படுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இல்லாத காரணங்களை இருப்பதைப் போல சித்தரிப்பது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி மட்டும் தான் வளர்ச்சிக்கு ஆதரவான கட்சி என்பதைப் போலவும், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ரூ.10,000 கோடி மதிப்பிலான அந்தத் திட்டம் வேறு மாநிலங்களுக்குச் சென்று விடும் என்றும் பேசி வருகிறார்.
தங்க மங்கை எங்கள் தங்கை கோமதி.. கத்தார் நாம் தமிழர் கட்சி நேரில் போய் வாழ்த்து!
தங்கக் கத்தி என்பதற்காக அதை எப்படி வயிற்றில் குத்திக் கொள்ள முடியாதோ, அதேபோல் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டம் என்பதற்காக 8 வழிச்சாலைத் திட்டத்தை ஆதரித்து 10 ஆயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட துரோகத்தை காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் செய்யும்; பாமக ஒருபோதும் செய்யாது.
8 வழிச்சாலைத் திட்டத்தால் தான் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்று பேசும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஓர் அடிப்படையான கேள்விக்கு விடையளிக்க வேண்டும். சென்னையிலிருந்து சேலம் செல்ல மொத்தம் 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்.3 நெடுஞ்சாலைகள் இருக்கும் போது நான்காவதாக மேலும் ஒரு நெடுஞ்சாலை தேவையா? அதுவும் குறிப்பாக 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறித்து இப்படி ஒரு சாலை அமைப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
சரியான இழப்பீடு கிடைத்தால் 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்க விவசாயிகள் தயாராக இருப்பதாக கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இவர் எப்போது விவசாயிகளின் பிரதிநிதியாக மாறினார் என்பது தெரியவில்லை. விவசாயிகளை இவர் எப்போது சந்தித்து இதுகுறித்து கருத்துக் கேட்டார் என்றும் புரியவில்லை.
தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே 5 மாவட்ட விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்கள் அதிக பணத்துக்காகத் தான் போராடுகிறார்கள் என்று கூறுவதை விட, மிகவும் மோசமாக விவசாயிகளை கொச்சைப்படுத்த முடியாது. தங்களைக் கொச்சைப்படுத்தும் அழகிரியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அழகிரி விரும்பினால், 5 மாவட்ட விவசாயிகளிடம் அவரை நான் அழைத்துச் செல்கிறேன். அங்குள்ள விவசாயிகள் அதிக விலைக்காகத் தான் போராடுவதாக கூறினால், அரசியலை விட்டே நான் விலகிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் அழகிரி விலகுவாரா?
8 வழிச்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை எதிர்க்கவில்லையே? என்று அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
எட்டு வழிச்சாலை திட்டத்தையும்,திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்தையும் ஒப்பிடுவதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டம் என்று விவசாயிகளால் எதிர்க்கப்படும் திட்டம் ஆகும்.
அதேநேரத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை அந்தப் பகுதியில் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் என்று விவசாயிகளால் வரவேற்றுப் பாராட்டப்பட்ட திட்டம் ஆகும். தங்கள் ஊருக்கு ரயில் வர வேண்டும் என்பதற்காக பல ஊர்களில் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை வழங்கியது காங்கிரஸின் புதிய தலைவர் அழகிரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? 8 வழிச்சாலைக்கு ஆதரவாக பேசினால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தானே?
வாக்குகளை வாங்கும் வரை ஒரு பேச்சு.... வாக்குகளை வாங்கி முடித்த பின்னர் வேறு பேச்சு என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் நம்பிக்கை துரோகம் ஆகும். இதற்குக் காரணமான திமுக - காங்கிரஸ் அணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.