பனையூரில் அன்புமணிக்கு அலுவலகம் திறக்கப்படுவது ஏன்? – பாமக எம்எல்ஏ அருள் விளக்கம்
சென்னை: பாமகவில் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் சர்ச்சையாகியுள்ளது. பொது மேடையிலேயே இருவரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பாமக எம்எல்ஏ அருள், "இது சிறிய சலசலப்பு தான். இன்று மாலைக்குள் எல்லாம் சரியாகிவிடும்." என்று கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் பேசிய அந்தக் கட்சியின் நிறுவனர், "கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் அன்புமணிக்கு உதவியாக இருப்பார்." என்று கூறினார். இதற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.

"எனக்கு உதவியா. அவன் கட்சியில் சேர்ந்தே நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. அவனுக்கு பதவியா. கட்சிக்கு நன்கு வேலை செய்பவர்களாக பார்த்து அந்தப் பதவியில் நியமனம் செய்யுங்கள்." என்று கூறினார். இதற்கு கடுப்பான ராமதாஸ், "இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் வெளியே செல்லலாம்." என்று கூறினார்.
மேலும் முகுந்தன் தான் இளைஞரணி தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார். இதற்கு அன்புமணி, "நான் பனையூரில் புதிதாக அலுவலகம் தொடங்கியுள்ளேன். என்னை சந்திக்க விரும்புவோர் அங்கு வந்து வரலாம்." என்று தொடர்பு எண்ணையும் கொடுத்துவிட்டு, மைக்கை மேஜையில் தூக்கி எறிந்து சென்றார்.
மேடையில் வைத்து அப்பா - மகனுக்கு இடையே நடைபெற்ற இந்த வார்த்தை போர் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த முகுந்தன் வேறு யாரும் இல்லை. ராமதாஸின் மகளும், அன்புமணி ராமதாஸின் சகோதரியுமான காந்திமதியின் மகன் தான். அதேபோல ஜி.கே மணி மகன் தமிழ்குமரனுக்கும் இளைஞரணி பதவி வழங்கப்பட்டுள்ளதை அன்புமணி விரும்பவில்லை.
அதனால் அப்பாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் அப்பா மகன் இடையே நிலவி வரும் பிரச்னை தொடர்பாக அந்தக் கட்சியின் எம்எல்ஏ அருளிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அருள், "இதெல்லாம் கட்டுக்கதை. பொய்யான தகவலை பரப்புகிறார்கள். பத்திரிகைகள் தான் தவறாக சித்தரிக்கிறார்கள்.
பனையூரில் நீண்ட காலமாகவே அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள நிர்வாகிகள், மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து வரும் நிர்வாகிகள் அன்புமணியை சந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட அலுவலகம். அது இந்தப் பிரச்னைக்காக உருவாக்கப்பட்ட அலுவலகம் கிடையாது.
ஒரு ஜனநாயக கட்சியில் கருத்து மாறுபாடு இருப்பது இயல்பு தான். பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் எங்கள் தெய்வம். எங்கள் சின்ன அய்யா அன்புமணி கட்சியின் தலைவர். இங்கு எந்த சச்சரவுக்கும் இடமில்லை. இது ஓரு குடும்பமாக இருக்கும் இயக்கம். 2.5 கோடி வன்னியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் ஒன்றாக பயணிக்கும் இயக்கம் இது.
நான் சாதாரண வாத்தியார் வீட்டு பையன். என்னையும் சட்டமன்ற உறுப்பினராக அழகு பார்த்தது ராமதாஸ் மற்றும் அன்புமணி தான். இன்று நடைபெற்றது சிறிய சலசலப்பு தான். மற்றபடி பெரிய முரண்பாடு எல்லாம் இல்லை. ஐயாவும், அன்புமணியும் வேறு வேறு நபர்கள் இல்லை. இருவரையும் ஒன்றாக தான் பார்க்கிறோம். இன்று மாலைக்குள் எல்லாம் சரியாகிவிடும்." என்றார்.












Click it and Unblock the Notifications