முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்து அனுப்பிய கடிதம்- சட்டசபை வளாகத்தில் ஒரு பரபர சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பா.ம.க. எம்.எல்.ஏக்கள் நேற்று சட்டசபை வளாகத்தில் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற வேண்டுமானால் வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான போராட்டங்களையும் பா.ம.க. நடத்தியது.
ஆனால் தனி இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அப்போதைய அதிமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பா.ம.க.வும் ஏற்றுக் கொண்டது.
ஆளுநர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம்...ஸ்டாலின் புகழ்ச்சிதான் அதிகம் - டாக்டர் ராமதாஸ் கிண்டல்
உள் இடஒதுக்கீடு
இதனடிப்படையில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சட்டசபை தேர்தலில் அதிமுக- பாமக கூட்டணிக்கு கை கொடுத்தது. வடமாவட்டங்களில் கணிசமான வன்னியர் வாக்குகளை பாமக பெற உதவியது. பாமகவுக்கு 5 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.
திமுக மீது விமர்சனங்கள்
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் நல்லது, கெட்டது என தினமும் கருத்துகளை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்து வருகிறார். பெரும்பாலும் விமர்சனங்கள்தான் முன்வைக்கப்படுகின்றன.
அதிமுக மீது பாய்ச்சல்
இன்னொரு பக்கம், பாமகவின் ராஜ்யசபா எம்.பி.யான அன்புமணி திடீரென அதிமுகவை சீண்டும் கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி பதிலடி கொடுத்தார். ஆனால் புகழேந்தியை அதிமுக தலைமை கட்சியைவிட்டே நீக்கியது.
முதல்வருடன் பாமக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
இதனால் லோக்சபா தேர்தலில் பா.ம.க. அணி மாறுமோ? அதற்கான அச்சாரமாக அதிமுகவை விமர்சிக்க தொடங்குகிறதோ? என்கிற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் பா.ம.க. எம்.எல்.ஏக்கள் ஜி.கே. மணி தலைமையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் எழுதிய கடிதம் கொடுக்கப்பட்டது.
வன்னியர் இடஒதுக்கீடு
மேலும் வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். திமுகவுடன் பாமக காட்டும் இந்த இணக்கம் இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.