எந்த வகையில் நியாயம் இது? தென் மாவட்டங்களுக்காக குரல் கொடுத்த அன்புமணி.. சரமாரி விமர்சனம்
சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாகவும், இனி அப்படிப்புகள் தொடரபடாது என்று நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த முடிவு முதுநிலை பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இடையிலும், தென்மாவட்ட மாணவர்கள் இடையிலும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. கல்வியாளர்கள் பலரும் இந்த முடிவிற்கு விமர்சனங்களை வைத்து இருந்தனர்.

நெல்லை அண்ணா பல்கலைக்கழகம்
இந்த நிலையில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு குறித்த பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கல்வியாளர்கள் பலரிடமும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முடிவை விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸ், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருப்பது கவலையளிக்கிறது.

அன்புமணி
இது உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் செயலாகும்! நெல்லை வளாகத்தில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அண்ணா பல்கலை. கூறுவதை ஏற்க முடியாது. மாணவர் சேர்க்கை இல்லாததை காட்டி பள்ளிகளையே மூடக்கூடாது என வலியுறுத்தப்படும் சூழலில் பல்கலை. படிப்புகளை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? மாணவர் சேர்க்கை குறையும் பட்சத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவது தான் சரியான செயலாக இருக்கும்.

அன்புமணி விமர்சனம்
மாறாக, இருக்கும் படிப்புகளை நிறுத்துவது அண்ணா பல்கலைகழகத்திற்கு அழகு அல்ல! நெல்லை வளாகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தப்பட்டால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிக்க சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டும். அதை தவிர்க்க நெல்லையில் முதுநிலை படிப்புகள் தொடர வேண்டும், என்று விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணா பல்கலை பாமக
அதன்படி தென் மாவட்ட மாநில மக்களை இது அதிகம் பாதிக்கும். கல்வி அது பள்ளிக்கல்வியாக இருந்தாலும் உயர் கல்வியாக இருந்தாலும் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் தென் மாவட்ட மக்களை புறக்கணிக்கும் வகையில் நெல்லை அண்ணா பல்கலைகழகத்தின் இந்த முடிவு அமைந்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டு இருக்கிறார். அன்புமணி மட்டுமன்றி பல்வேறு கல்வியாளர்களும் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications