பாமக நிறுவனராக ராமதாஸ் இருந்தாலும்.. எந்த அதிகாரமும் இல்லை.. கட்சி விதிகள் சொல்வது என்ன?
சென்னை: பாமகவின் நிறுவனராக ராமதாஸ் இருந்தாலும், கட்சியில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். பாமகவை பொறுத்தவரை பொதுக்குழுவுக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள தலைவராக அன்புமணி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ், அன்புமணி மீதான ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, அம்மாவை பாட்டிலை கொண்டு அடிக்க முயற்சித்தது என்ற குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்புமணி பதிலடி
இதற்கு அன்புமணி, இந்த உலகிலேயே ரொம்ப பிடித்தவர் அம்மா தான். அவருக்கும் என்னைதான் மிகவும் பிடிக்கும். அவர் மீது இதுவரை சிறு துரும்பை கூட படவிட்டதில்லை என்று பதில் அளித்தார். அதேபோல் கட்சியையும் கையில் எடுக்கும் வகையில் அன்புமணி பேசினார். இதனைத் தொடர்ந்து பாமகவின் மாவட்டச் செயலாளர்களை நீக்கி, அந்த இடத்திற்கு புதியவர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமித்து அறிவித்தார்.
பாமக சட்ட விதிகள்
இதற்கு அன்புமணி, அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் அவரே கட்சிப் பதவியில் தொடர்வார் என்று அறிவித்தார். இதனால் பாமக தொண்டர்கள் சோகம் அடைந்தனர். இந்த நிலையில் பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்-க்கு இல்லை என்று தகவல் தெரிய வந்துள்ளது. பாமக சட்ட விதிகளின்படி, பாமகவின் தலைவருக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது.
பொதுக்குழுவுக்கு அதிகாரம்
கட்சியை உருவாக்கியது ராமதாஸ்-ஆக இருந்தாலும், அவர் நிறுவனராகவே இருந்து வருகிறார். பாமகவின் தலைவராக 2022ஆம் ஆண்டு முதல் அன்புமணி இருக்கிறார். இதனால் மாவட்டச் செயலாளர்களை நீக்குவதாக இருந்தாலும், புதிதாக பதவி அளிக்க வேண்டும் என்றாலும், தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது.
அன்புமணி ஆதரவாளர்கள்
அதேபோல் பாமகவில் தலைவர் அன்புமணிக்கே முழு அதிகாரம் உள்ளது. இதனையே பாமக நிர்வாகிகளும் கூறி வருகிறார்கள். தேர்தல் ஆணைய விதிகளின்படி பொதுக்குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். இதனால் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள தலைவராக அன்புமணி ராமதாஸ் இருக்கிறார்.
சூசகமாக சொன்ன அன்புமணி
இதனால் பாமகவின் நிறுவனராக உள்ள ராமதாஸ், ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ அதிகாரம் கிடையாது. இதனை அன்புமணி ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். நேற்றைய பேச்சின் போது கூட அன்புமணி, பொதுக்குழுவுக்கே முழு அதிகாரம். நீங்கள் தான் என்னை தேர்வு செய்தீர்கள். என் கடிதம் தான் செல்லும் என்று தெரிவித்திருந்தார். இதனால் பாமகவில் ராமதாஸ் அதிகாரம் முடிவுக்கு வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications