ரூ.1,000ஐ தாண்டிய சிலிண்டர் விலை: பெட்ரோல் டீசல் விலைக்கு மத்தியில் கூடுதல் சுமை.. பா.ம.க. ராமதாஸ்
சென்னை: சமையல் எரிவாயு விலை ரூ 1000 த்தை தாண்டியுள்ளது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். எனவே விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை ரூ 50 உயர்ந்து ரூ 1015 க்கு விற்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 50 அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரூ 50 அதிகரித்துள்ளது. இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமையல் எரிவாயு விலையை திரும்ப பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
1. சமையல் எரிவாயு விலை மீண்டும் உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1015.50 ஆக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இது கூடுதல் சுமையாகும்.

2. சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் 10 தவணைகளில் ரூ.305 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 44% உயர்வு ஆகும். மிக மிக அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் 44% உயர்த்தப்படுவதை ஏற்க முடியாது. இதை ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது!

3. ஒரு காலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக மானியத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. 2018-ஆம் ஆண்டு நவம்பரில் மானியத்தின் அளவு ரூ.435 என்ற உச்சத்தை தொட்டது. ஆனால், இப்போது மானியம் ரூ.24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது!

4. ஒரு புறம் விலை அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் மானியம் குறைக்கப்படுவது இரட்டைத் தாக்குதலாக அமைந்து விடும். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; மானியத்தின் அளவை படிப்படியாக உயர்த்த வேண்டும்!

இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications