‘இங்க நான் கிங்.. தைலாபுரம் தான் பாமக’.. தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் பளீச்
சென்னை: பாமகவில் தந்தை மகன் பனிப்போர் உச்சத்தில் உள்ளது. ராமதாஸ், அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. இருவரும் தனித்தனி பாதையில் பயணித்து கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான விவரங்களில், பாமக கட்சியின் அலுவலகம் அன்புமணி வசம் உள்ள திலக் நகர் என்று குறிப்பிடப்பட்டது. இது அன்புமணி தரப்புக்கு உற்சாகத்தையும், ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராமதாஸ் பரபரப்பான பதிலை அளித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதிருந்தே அனல் பறக்க தொடங்கிவிட்டது. கூட்டணியில் பல மாற்றங்கள் வரத்தொடங்கிவிட்டன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். அன்றைய தினமே அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

அரசியல் மாற்றங்கள்
இதேபோல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை குடும்பத்தினருடன் சந்தித்து நலம் விசாரித்தார். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேமுதிகவும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பதிலாக திமுக கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மற்றொரு முக்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முன்னதாக இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தாலும், இதன் பின்னணியிலும் அரசியல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்
இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், "உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என முதலமைச்சரிடம் நீங்கள் செல்போனில் கூறியதாக சொல்கிறார்களே." என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ராமதாஸ், "நான் போனில் அப்படி சொல்லவில்லை. நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. அதுவும் தமிழக முதலமைச்சர் என்பதால் நலம் விசாரித்தேன். அவரின் உடல்நலத்துக்கு பெரிய பிரச்னை இல்லை. சாதாரண பிரச்னை தான். அது விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தேன். அதற்கும் அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை." என்று தெரிவித்தார்.
தைலாபுரம் தான் பாமக
"தைலாபுரத்துக்கு வெளியே பாமக அலுவலகம் இல்லை என தெரிவித்தோம். தற்போது அன்புமணியிடம் உள்ள திலக் தெரு தான் பாமக அலுவலகம் என குறிப்பிட்டுள்ளார்களே?' என்ற கேள்விக்கு, "ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி. அதேபோல நான் இருக்கும் இடம் தான் பாட்டாளி மக்கள் கட்சி. தைலாபுரம் தான் பாமக. இதை புரிந்து கொள்ளுங்கள்." என்றார்.
தொடர்ந்து, "எங்கள் கட்சியின் பொதுக்குழு வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறுகிறது." என்றவரிடம், "அந்தக் கூட்டத்துக்கு அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படுமா." என்ற கேள்விக்கு, "யார் யார் அழைப்புக்கு உரியவர்கள் என்பதை கட்சி தீர்மானிக்கும். அவர்களுக்கு அழைப்பு செல்லும்." என்றார்.












Click it and Unblock the Notifications