உள்துறை செயலாளருக்கு பறந்த கடிதம்.. ராமதாஸ் செக் மேட்.. அதிர்ச்சியில் அன்புமணி
சென்னை: பாமகவில் தந்தை, மகன் யுத்தம் உச்சத்தில் உள்ளது. ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உரிமை மீட்க, தலைமுறை காக்க என்கிற பெயரில் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். தன்னிடம் அனு அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொள்வதாக ராமதாஸ் ஏற்கனவே காவல்துறையிடம் தடை விதிக்க மனு கொடுத்திருந்தார்.
காவல்துறை தடையை மீறி அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்க கோரி இந்த முறை உள்துறை செயலாளருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே பனிப்போர் தீவிரமடைந்து வருகிறது. தந்தை, மகன் இடையேயான இந்த மோதல் போக்கால் கட்சிக்குள் குழப்பமாகி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து நேர் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
அன்புமணி ராதமாஸ் கடந்த 25 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். முன்னதாக அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை கேட்டு, ராமதாஸ் சார்பில் காவல்துறை டிஜிபிக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறை சார்பில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை எதிர்த்த அன்புமணி தரப்பு, நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை, திட்டமிட்டபடி நடைபயணம் தொடரும் என்று நடைபயணத்தை தொடங்கிவிட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் உரிமைகளை மீட்போம் என்கிற பெயரில் அன்புமணி 100 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை, எனவே அந்த நிகழ்வில் பாமக கட்சி பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. இது தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் என்று ராமதாஸ் தரப்பில் காவல்துறையிடம் முறையிடப்பட்டது. காவல்துறையின் தடையை மீறி அன்புமணி காஞ்சிபுரம், திருப்போரூரில் நடைபயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபயணம் செய்து வருகிறார். இது ராமதாஸ் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையின் தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட அன்புமணி உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
தற்போது ராமதாஸ் ஒரு படி மேலே சென்று அன்புமணி நடைபயணத்துக்கு தடை கேட்டு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், அன்புமணி நடைபயணத்துக்கு நிறுவனத் தலைவரான என்னிடம் எந்த அனுமதியும் கேட்கப்படவில்லை. அதற்கு அரசு அனுமதி வழங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபயணத்துக்கு ஏற்கனவே காவல்துறை தடைவிதித்த நிலையில், அதையும் மீறி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். எனவே தடை உத்தரவை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்புமணி இந்த நடைபயணத்தை தொடரும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ராமதாஸ் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications