“உறுப்பினர் அட்டைல இருக்குற நம்பருக்கு கால் பண்ணா அது பீகாருக்கு போகுது... என்னத்த சொல்ல” அன்புமணி!
சென்னை: ஒருமுறை பாமக உறுப்பினர் அட்டையில் உள்ள போன் நம்பருக்கு போன் பண்ணிய போது, பீகாருக்கு சென்றதாக அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறைவாக உறுப்பினர்கள் இருந்தாலும், எனக்கு உண்மையான உறுப்பினர்கள் வேண்டும் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், பணிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அன்புமணியும், செளமியாவும் கால்களை பிடித்து கெஞ்சியதாகவும், கூட்டணி அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அன்புமணி மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

அன்புமணி ஆலோசனை
இந்த நிலையில் சென்னையில் சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாமகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமகவின் தலைவர் அன்புமணி, ராமதாஸ் தான் எங்களின் குலசாமி.. அவரின் வழிகாட்டுதலிலும், கொள்கைகளிலும் பயணித்து பாமகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.
உறுப்பினர் அட்டை
இதன் மூலமாக பாமகவில் உள்ள ராமதாஸின் அதிகாரம் குறைக்கப்பட்டு, கட்சியை அன்புமணி கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பாமகவின் உறுப்பினர் சேர்க்கையை கட்சி நிர்வாகிகள் முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டைகளை புதிதாகவும் அறிமுகம் செய்துள்ளார்.
பாமகவுக்கு நிதி
அந்த உறுப்பினர் அட்டை க்யூ ஆர் கோடுடன் கூடியதாக இருக்கிறது. அந்த க்யூ ஆர் கோடு மூலமாக பாமகவிற்கு பொதுமக்கள் நன்கொடை கொடுக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாமக ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அன்புமணி பேசிய சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அன்புமணி சொன்ன சம்பவம்
அதில் அன்புமணி பேசுகையில், கடந்த காலத்தில் நிறைய பார்த்துவிட்டேன். ஒரு தொகுதியில் பாமகவுக்கு 1.5 லட்சம் உறுப்பினர்கள். ஆனால் தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளே 65 ஆயிரம் தான். அப்போது ஒரு உறுப்பினர் அட்டையில் உள்ள நம்பருக்கு போன் பண்ணினால், அந்த போன் பீகாருக்கு போகிறது.. அதுமாதிரி செய்யாதீர்கள். எனக்கு குறைவாக இருந்தாலும், உண்மையான உறுப்பினர்கள் வேண்டும்.
கட்சிப் பணிகள்
எண்ணிக்கை, போட்டி என்பதெல்லாம் தேவையில்லை. அதிக உறுப்பினர்களை சேர்த்தால், மோதிரம், செயின் எல்லாம் போடுவேன் என்று சொல்ல மாட்டேன். உங்களின் மனசாட்சிக்கு தெரியும். இதில் போட்டி கிடையாது. நம்ம கட்சி, நம்ம எதிர்காலம் என்று பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் பணிகளை அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications