மாலத்தீவில் தவிக்கும் தமிழர்களை மீட்க அன்புமணி கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகம் நடவடிக்கை
சென்னை: மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாலத்தீவுக்கான இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாமக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: மாலத்தீவில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஊதியமும், சரியான உணவும் வழங்காமல் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.
மாலத்தீவில் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் அவலநிலை குறித்தும், அவர்களின் கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதும் விளக்கி அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 13-ஆம் தேதி வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மாலத்தீவுக்கான இந்திய தூதரகம்,'' பாதிக்கப்பட்டுள்ள இந்திய தொழிலாளர்களுடன் மாலத்தீவுக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை மாலத்தீவுக்கான இந்திய தூதரகம் கொண்டு சென்று பேச்சு நடத்தி வருகிறது. இது தொடர்பாக இந்திய தொழிலாளர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து வருகிறது" என்று தெரிவித்திருக்கிறது.
தூதரகம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அன்புமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ''மாலத்தீவில் தனியார் நிறுவனமொன்றில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களுக்கு, அவர்கள் 6 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நாளில் நாளில் இருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை!
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் நிலை என்னவாகுமோ? என தமிழகத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications