திமுக கூட்டணியில் ரீ எண்ட்ரிக்கான சாத்தியங்கள் கிடைக்குமா? டெல்லியை வைத்து கணக்கு போடுகிறதா பாமக?
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணி விவகாரத்தில் ஏகப்பட்ட கணக்கு வழக்குகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. இதில் திமுக கூட்டணி கட்சிகளும் குறுக்கே நெடுக்காக வலம் வருகின்றன. இந்த இரு தரப்பு கூட்டணி விவகாரங்களிலும் பாமகவின் ரோல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி எப்படி இருக்கப் போகிறது? என்பதற்கான அலசல்கள் இப்போதே தமிழகத்தில் அனலடிக்க தொடங்கிவிட்டன. பாஜகவைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட அதிமுக, பாமகவை தக்க வைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும்; இதனடிப்படையில் ஒரு சில தொகுதிகளிலாவது வென்று காட்ட வேண்டும் என்ற முனைப்பு உள்ளது.

இறுக்கம் காட்டும் இபிஎஸ்
ஆனால் பாஜகவின் இந்த வியூகத்தில் மண் அள்ளிப் போட்டு வருகிறார் இபிஎஸ். தமது தலைமையிலான அதிமுகவில், ஓபிஎஸ், தினகரன் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என இறுக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி எனும் இபிஎஸ். இதனை பாஜக ரசிக்காமல் நெருக்கடி கொடுத்து வருகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் அத்தனை வழிகளிலும் இபிஎஸ்ஸை நெருக்கிப் பார்த்து கூட்டணியை சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் படுகுறியாக இருக்கிறது.

இபிஎஸ்ஸுடன் டூ விடும் பாமக?
எடப்பாடி பழனிசாமியோ, எத்தனை காலம்தான் பாஜகவின் பின்னாலே நிற்பது? என்பதில் கச்சிதமான நிலைப்பாட்டுடன் நிற்கிறார். அதுவும் அமித்ஷாவை ஏன் சந்திக்க வேண்டும் என்ற ஒற்றை கேள்வியில் ஆஹோ ஓஹோவென அதிமுக நிர்வாகிகள் காட்டிய ஆராவாரம் அவரை அந்த நிலைப்பாட்டில் அசைக்க முடியாதவராகவே நிற்க வைத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் கணக்கில் பல கட்சிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாமக தரப்பில் எடப்பாடி தரப்பு பேச முயற்சிக்கவும் செய்ததாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் பாமக இதனை அலட்சியம் செய்து வருகிறதாம்.

பாமக கணக்கு வேறாம்
பாமகவின் இந்த திடீர் போக்கு குறித்து அரசியல் வட்டாரங்களில் நாம் பேசியபோது, சட்டசபை தேர்தலில் மீண்டும் வந்ததை போல லோக்சபா தேர்தலிலும் தலைநிமிர வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் வியூகமாம். இதனால்தான் இப்போதைக்கு எந்த அணிக்கும் எந்த சிக்னலும் தராமல் ஆதாயத்தை மட்டும் இலக்காக வைத்து கண்காணித்துக் கொண்டிருக்கிறதாம் பாமக என்கின்றனர்.

பாஜக மீது பாமக கோபம்?
அதேநேரத்தில் எதிர்கால போக்குகளை பாமக வட்டாரங்களில் விசாரித்த போது, என்னதான் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தாலும் அமைச்சர் பதவி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. பாமகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. அப்படி கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. பிறகு எதற்கு பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்க வேண்டும். அதற்கு பேசாமல் திமுக அணியில் சில இடங்களில் போட்டியிட்டு வெல்லும் சாத்தியங்களை ஏன் தவறவிட வேண்டும் என்கிற விவாதங்களும் நடக்கிறதாம்.

திமுக திசையை நோக்கி?
திமுக அணியில் சாத்தியங்கள் கூடி வந்தால் பாமகவுக்கான கதவுகள் தானாகவே திமுக அணியில் திறக்கப்பட்டுவிடும்; அதுதான் எங்களது எதிர்பார்ப்பு என்கின்றனர் பாமக ஆதரவாளர்கள். அதனால்தான் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி களேபரங்கள் தொடர்பான ஆரூட விவகாரங்களில் தலையையே பாமக காட்டாமல் அமைதி காக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications