காத்திருக்கிறது கலைஉலகு.. விறுவிறு மின்சார மனிதனை விரைவில் பார்க்கலாம்! ரஜினியுடன் பேசிய வைரமுத்து
சென்னை : கடந்த 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், அவரிடம் பேசியதாகவும், ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று திரும்பி ரசிகர்களை மகிழ்விப்பார் என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ரஜினியின் இதயத்திலிருந்து பிரிந்து செல்லும் பிரதான ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதனை கண்டறிந்து ஸ்டண்ட் வைத்து சரி செய்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இதனையடுத்து சாதாரண வார்டுக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.
தொடர்ந்து ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் சரி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்ததும் மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இருந்தார். இந்த நிலையில் சுமார் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று அதிகாலையில் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. சில நாட்கள் அவர் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த போதே நடிகர் ரஜினிகாந்துடன் பேசியதாகவும், விரைவில் நலம் பெற்று திரும்புவார் என கவிஞர் வைரமுத்து நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"
அன்பு நண்பர்
திரு. ரஜினிகாந்த்
மருத்துவமனையிலிருந்து
பேசினார்
திடமாகவும் கம்பீரமாகவும்
வழக்கம்போல் ஒலித்தது
அவர் குரல்
"எப்படி இருக்கிறீர்கள்" என்றேன்
"நன்றாக இருக்கிறேன்;
ஆனால், களைப்பாக இருக்கிறேன்"
என்றார்
"எப்போது
வீடு திரும்புவீர்கள்" என்றேன்
"ஓரிரு நாளில்" என்றார்
"உள்ளம் உடல் இரண்டும் நலமுற
நல்ல ஓய்வுகொள்ள வேண்டும்"
என்றேன்
அதிக நேரம் பேசி
அவர் சக்தியைச்
செலவழிக்க விரும்பவில்லை
வாழ்த்துச் சொல்லி
இணைப்பை
நிறைவு செய்தேன்
ஆகவே அன்பர்களே!
என்
உள்ளறிவு உணர்ந்தவரையில்
அவர் பாதிப்பிலிருந்து
மீண்டுவிட்டார்
கடந்த சிலநாட்களாய்
ஊருக்குப் போயிருந்த
உங்கள் புன்னகை
மீண்டும்
உதட்டுக்குத் திரும்பட்டும்
அந்த
விறுவிறுப்பான
மின்சார மனிதனை
விரைவில் பார்க்கலாம்
வாருங்கள் ரஜினி;
காத்திருக்கிறது கலைஉலகு" என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து வைரமுத்துவின் ரசிகர்களும், ரஜினிகாந்தின் ரசிகர்களும் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வர பிரார்த்தனையும், வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.
முன்னதாக ரஜினிகாந்த் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.மூத்த இருதயநோய் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை (எண்டோவாஸ்குலர் ரிப்பேர்) முழுவதுமாக அடைத்தார், . திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நிலையாக இருக்கிறார், உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications