பரபரப்பாக நகரும் வழக்கு.. கோடநாடு கொலை, கொள்ளையில் பயன்படுத்திய கார் உரிமையாளரிடம் போலீஸ் விசாரணை!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளையில் பயன்படுத்திய கார் உரிமையாளர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குதான் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஹாட் டாபிக் ஆக இருந்து வருகிறது.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கனகராஜ் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

மற்றொரு நபரான சயான் என்பவரும் கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். சினிமா காட்சியை விட பரபரப்பாக நகரும், இந்த எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக 2019-ல் கூறினார்கள்.
அப்போது இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கோடநாடு எஸ்டேட் வழக்கு அப்படியே அமுங்கியது. இதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சயானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வழக்கு பரபரப்பை எட்ட தொடங்கியது. தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீதிமன்றம் உத்தரவுப்படி கோடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது. இதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமும் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக சயானிடம் விசாரணை நடத்திய போலீசார், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கனகராஜின் அண்ணன் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோர் என விசாரணை படலத்தை விரிவாக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் காவல்துறையினர் மறுவிசாரணைக்கு தடை விதிக்க கோரி வழக்கின் காவல்துறை சாட்சியான கோவையை சேர்ந்த அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். ''ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்று உள்ளது. மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று அவர் கூறி இருந்தார். ஆனால் வழக்கின் மறுவிசாரனைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இவ்வாறு வழக்கு பரபரப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்க கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் உள்பட 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய எஸ்.பி அலுவலக கட்டிடத்தில் வைத்து காரின் உரிமையாளர் நவ்ஷாத், புரோக்கர் நவ்பல் ஆகிய இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய கார் நவ்ஷாத்துக்கு சொந்தமானதாகும். இந்த காரில் சென்றுதான் குற்றாவளிகள் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். நவ்பல் என்பவர் வாகனத்துக்கு ஏஜென்சியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை இதுவரை 40 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விசாரணை வளையத்தில் வருபவர்களிடம் பழைய விசாரணை அதாவது அதிமுக ஆட்சி காலத்தில் விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications