திருவான்மியூரை அதிரவைத்த மணிப்பூர் இளைஞர்கள்.. தலைக்கேறிய போதையில் செய்த காரியம்.. பறிபோன உயிர்
சென்னை: சென்னை, திருவான்மியூர் பகுதியில் தங்கியிருந்த மணிப்பூர் இளைஞர்களிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதையடுத்து, கத்திரிக்கோலால் அண்ணனை தம்பியே குத்திக் கொன்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசியல் கொலைகள், பழிக்குப் பழி கொலைகள் என டிசைன் டிசைன்களாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையே குடும்ப உறவுகளுக்கிடையேயான கொலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மதுபோதையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஃபன்னுக்காக நண்பர்கள், சகோதரர்கள் இணைந்து மது அருந்தும் நிலையில், ஒரு சில சமயங்களில் இதுபோன்ற சம்வங்கள் விபரீதங்களிலும் முடிந்துவிடுகிறது.
அந்த வகையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த மணிப்பூர் சகோதரர்கள் இருவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மதுபோதை தலைக்கேறிய நிலையில், தம்பியே அண்ணனை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவான்மியூர் அருகே உள்ள மருதீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். இவர் தனது வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரை வாடகை விட்டுள்ளார். அந்த வீட்டில் மணிப்பூரைச் சேர்ந்த ரெபேகா, அவரது ஆண் நண்பர் பவுமிலியன் (28), பவுமிலியனின் அண்ணன் காய்சுவலியன் (32) ஆகியோர் இணைந்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு ரெபேகா சென்றுள்ளார். பவுமிலியனும், காய்சுவலியனும் மட்டும் அறையில் தங்கியிருந்துள்ளனர். இவர்களுக்கிடையே மது போதையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி காலை பவுமிலியனுக்கும், காய்சுவலியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, காய்சுவலியன் தனது தம்பி பவுமிலியனை மோசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பவுமிலியன் அருகில் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது அண்ணனின் மார்புப் பகுதியிலேயே ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பலத்த காயமடைந்த காய்சுவலியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடியுள்ளார்.
அறையில் இருந்து வந்த அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, காய்சுவலியன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் செந்தில்வேலன், திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காய்சுவலியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை செய்த பவுமிலியனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications