ஏர்டெல்லுக்கு விபூதி அடித்த பல்லாவரம் பாய்ஸ்.. அடுக்குமாடிக்கு தேடி வந்த போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை : வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து ஏர்டெல்லுக்கு விபூதி அடித்த பல்லாவரம் இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் கூட்டுச்சதி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.அந்த தொழில்நுட்பத்தை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், கெட்டதிற்கும் பயன்படுத்தலாம். ஆனால் தொழில் நுட்பத்தை கொடுக்கும் நிறுவனங்களுக்கே சிலர் அல்வா கொடுக்கிறார்கள். அவர்களுடைய தொழில் நுட்பங்களை அவர்களுக்கே தெரியாமல் சட்டவிரோதமாக பயன்படுத்துவதும் நடக்கிறது.
வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து ஏர்டெல்லுக்கு விபூதி அடித்திருக்கிறார்கள் பல்லாவரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இவர்கள் என்ன செய்தார்கள், எப்படி மாட்டினார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

புகார்
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏர்டெல் தொலைத்தொடர்பு அலுவலகத்தின் நோடல் அலுவலராக ஜெயகுமார் என்பவர் பணியாற்றுகிறார். இவர் சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அண்மையில் அளித்தார். அந்த புகாரில் அவர் "பல்லாவரம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்தின் தொலைத்தொடர்பை பயன்படுத்தி சிலர் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக" கூறி இருந்தார். அவர்களின் விவரங்களையும் போலீசுக்கு ஜெயகுமார் கொடுத்தார்.

மோசடி
இதன் அடிப்படையில் பல்லாவரம் போலீசார் நேரில்சென்று விசாரித்தனர். பல்லாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி சிலர் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

பெரும்பாக்கம்
அதேபோல் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, தாழம்பூர் ஆகிய பகுதிகளில் தங்கி தொழில்நுட்ப சாதனைங்களை பயன்படுத்தி போலியாக சிம்கார்டை செயல்பட செய்து சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

கணினிகள் பறிமுதல்
இதையடுத்து பல்லாவரத்தில் தங்கி இருந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த பாஹத் முகமது (வயது 25) மற்றும் சித்தாலபாக்கத்தில் தங்கியிருந்த சாஹல் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், ரவுட்டர், 1200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை
விசாரணையில் கடந்த 5 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான முகம் தெரியாத நபர் மூலம் இதனை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வந்துள்ளனர். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், மற்ற வசதிகள் செய்து தருவதாக கூறியதன் பேரில் அவர்களுக்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னையில் பரபரப்பு
விசாரணைக்கு பின்னர் கேரளாவை சேர்ந்த பாஹத் முகமது (வயது 25) மற்றும் சித்தாலபாக்கத்தில் தங்கியிருந்த சாஹல் (25) ஆகிய 2 பேர் மீதும் கூட்டுச்சதி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து ஏர்டெல்லுக்கு விபூதி அடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications