மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன் என பேசிய மகாவிஷ்ணு! போலீஸில் புகார்
சென்னை: அசோக் நகர் அரசு பள்ளியில், ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் சிறப்புரையாற்றியிருந்தார். ஆனால், அவர் பேசிய விஷயங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவர் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாகவும், மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வகையிலும், மனிதர்களின் பிறப்பை முன்ஜென்ம பாவத்தின் அடையாளமாகவும், மாணவிகளிடையே மதரீதியாகவும் சொற்பொழிவு என்கிற பெயரில் விசமத்தனமான கருத்துக்களை பரப்பியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன் என அவர் பேசியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு என்கிற அந்த நபர், அந்த ஆசிரியரை இழிவுப்படுத்தும் வகையில் அறிவற்றவர் எனவும் பேசியுள்ளார். தொடர்ந்து அவர் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ஒருவரது இயலாமையை பேசியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு அரசுப் பள்ளியில், கல்விக்கு சம்மந்தம் இல்லாத ஒரு நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது யார்? அரசு பள்ளிகள் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படுகின்றதா? கடந்த சில ஆண்டுகளாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது. விவாதமாகி, ஊடக வெளிச்சம் பெற்ற பிறகே தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்போ அல்லது தடை உத்தரவோ பிறப்பிக்கப்படுவதை காண முடிகின்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனத்தை எழுப்பியிருந்தன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிரடி விசாரணையில் இறங்கியது. எந்த பள்ளியில் மூட நம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்பட்டதோ, அதே பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார். மட்டுமல்லாது தேர்வுக்கான மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், விஷம கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி எழுப்பிய, மாற்று திறனாளி ஆசிரியர் கவுரவிக்கப்பட்டார்.
மறுபுறம் பள்ளிக்கல்வித்துறையின் விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேநேரம், மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன் என்று அவர் கூறியிருந்தது, தங்களுக்கு எதிரான வன்செயல் என்று மாற்றுத்திறனாளிகள் கூறியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications