சந்தியாவை கொன்று சாதுர்யமாக தடயத்தை மறைத்த பாலகிருஷ்ணன்.. பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி?
Recommended Video
சென்னை: என்னதான் பிரபஷனல் கில்லராக இருந்தாலும் எப்படியும் கொலையாளி கொலை நடந்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பதை சட்டம் சொல்கிறது. அந்த தடயத்தை வைத்து இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கொலையாளி சிக்குவதை நாம் பார்த்திருக்கிறோம். அது போல்தான் தூத்துக்குடி சந்தியா விவகாரத்தில் நடந்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த சந்தியாவுடனான தகராறில் சுத்தியலால் தலையில் அடித்தார் கணவர் பாலகிருஷ்ணன். பின்னர் சடலத்தை மறைக்க வழிதேடி வயிறு முட்ட குடித்த பாலகிருஷ்ணன் சடலத்தை அப்படியே கழிவறைக்கு இழுத்து சென்றுள்ளார்.
7 துண்டுகளாக வெட்டி சாக்குபைகளில் மூட்டை கட்டி அடையாளம் தெரியாமல் இருக்க ஆங்காங்கே வீசியுள்ளார். எனினும் அவர் கொலையுண்டவர் எப்படி அடையாளம் காணப்பட்டார், கொலையாளி எப்படி கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பச்சை
இதுகுறித்து காவல் துறை சார்பில் கூறுகையில், பெருங்குடி குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட வலது கையில் சிவன் பார்வதி படமும் முழங்கையில் டிராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த டிராகன்தான் இந்த வழக்கில் துப்புதுலங்க காரணமாக இருந்தது.
நரிக்குறவர்
இந்த புகைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒட்டினோம். பச்சைக்குத்தும் நரிக்குறவர்களிடமும் இதுகுறித்து விசாரித்தோம். அந்த நேரத்தில்தான் நாகர்கோவிலில் இருந்து ஒருவர் பள்ளிக்கரணை போலீஸாருக்கு பேசியுள்ளார். அப்போது தனது மகள் சென்னையில் கணவருடன் வசிப்பதையும் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையும் மகளின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்துள்ளார்.
வாடகை வீடு
அப்போதுதான் பாலகிருஷ்ணன் குறித்த தகவல்கள் கிடைத்தன. அவர் ஒரு சைக்கோ என்பதும் மனைவியிடம் உன் அழகுதான் உனக்கு எமன் என்று அவ்வப்போது கூறிவந்ததும் தெரியவந்தது. ஜாபர்கான்பேட்டையில் ரூ. 5000 வாடகைக்கு குடியிருந்துள்ளார். அந்த வீட்டுக்கு ரூ. 20000 அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அந்த வாடகையும் கொடுக்க முடியாமல் தற்போது அட்வான்ஸில் இருந்து கழித்து வருவதாக உரிமையாளர் தெரிவித்தார்.
பாலகிருஷ்ணனிடம் விசாரணை
ஜாபர்கான்பேட்டை வீட்டுக்கு சென்ற போது அவர் வெளியே சென்றிருந்தார். அப்போது வீடு திரும்பிய அவரிடம் சந்தியா எங்கே என கேட்டோம். அதற்கு அவர், சந்தியா வெளியே போயுள்ளார். சற்று நேரத்தில் வந்துவிடுவார் என கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் போலீஸார் பாலகிருஷ்ணனின் செல்போனை பார்த்தபோது அதில் சந்தியாவின் விதவிதமான புகைப்படங்கள் இருந்தன.
டிராகன் படம்
அதில் ஒரு புகைப்படத்தில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதை போன்றே பச்சைக்குத்தப்பட்டிருந்ததை போலீஸார் கவனித்தனர். இதை வைத்து பாலகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினோம். முதலில் சொல்ல மறுத்த அவர் பின்னர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். எனவே டிராகன் படமே இந்த வழக்கில் துப்புக் கிடைக்க காரணமாக இருந்தது என போலீஸார் தெரிவித்தனர்.