சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் எஸ்கேப்! இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடியான சம்பவம் செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் மொட்டை கிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசியதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்திய பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட பல பயங்கர ரவுடி கும்பல்கள் ஒன்றாக சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறது. குறிப்பாக இந்த கொலை வழக்கில் சிசிங் ராஜா, சம்பா செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார். வெங்கடேஷ் பண்ணையாரின் நெருங்கிய ஆதரவாளரான சம்பவம் செந்தில் சென்னையில் வழக்கறிஞராக இருக்கிறார். பிரபல ரவுடியான கல்வெட்டு ரவிக்கு பாதுகாப்பாக அவர் ஸ்கெட்ச் போட்டதாக கூறப்படுகிறது
கல்வெட்டு ரவிக்கு ஆதரவாக கத்தி எடுத்த செந்தில் வழக்கறிஞராக இருந்து ரவுடியாக மாறியதாகவும் கூறப்படுகிறது. அவர் ஸ்கெட்ச் போட்டால் மிஸ்ஸாகாது என்பதால் தான் சம்பவம் செந்தில் என பெயர் எடுத்தார். பின் நாட்களில் அது சம்போ செந்தில் என மாறியது. இந்த நிலையில் சம்பவம் செந்தில் கூட்டாளியாக மொட்டை கிருஷ்ணன் இருக்கிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட ரவுடி தொழிலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரௌடி மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தற்போது இல்லை.. கடந்த சில இடங்களுக்கு முன்பு இந்த விசாரணை நடைபெற்றிருக்கிறது. ஆனால் இந்த தகவல் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.
மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்ந்து பலமுறை மோனிஷா தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதை அடுத்து அதனை கண்டறிந்த போலீசார் அவரை நேரில் வரவழைத்து எதற்காக பேசினீர்கள்? எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள்? என்ன விவகாரம் குறித்து பேசப்பட்டது? என கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர் பேசியதற்கான ஆதாரங்களை காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால் தங்கள் வழக்குகள் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாகவும் மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மோனிஷா விளக்கம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மோனிஷா மொட்டை கிருஷ்ணன் குறித்து சொன்ன தகவல்களை வைத்து நெல்சன் இடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications