அடுத்தகட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! கொலையாளிகளுக்கு ’ஷாக்’ நியூஸ்! போலீஸ் அதிரடி ப்ளான்
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், 5 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள 20 பேரின் சொத்துக்களை போலிசார் முடக்க திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை ஜூலை 14ஆம் தேதி அதிகாலை விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ரெட்டேரி பகுதியில் இயற்கை உபாதைக்காக காவல் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது, திருவேங்கடம் தப்பி ஓடி, புழல் வெஜிடேரியன் நகர் பகுதியில் ஒரு தகர கொட்டகையில் பதுங்கியுள்ளார் திருவேங்கடம். அங்கு அவர் வைத்திருந்த துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் திருவேங்கடம் தவிர்த்து தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20 பேர் சிறையில் உள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், சதீஷ், செல்வராஜ், ஹரிஹரன், அஞ்சலை, ஹரிதரன்,பிரதீப், விஜயகுமார் உள்ளிட்ட 20 பேரின் சொத்துக்களை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்க வங்கிகளை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications